முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை, நீலகிரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்திலும், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளிலும் லட்சத்தீவு, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்று சுமார் 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் அந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து