மத்தியபிரதேச இடைத்தேர்தலில் பா.ஜனதா 19 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இடைத்தேர்தல் நடந்த மற்ற 10 மாநிலங்களிலும் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், திக்விஜய் சிங் ஆகியோரை மிகப்பெரிய துரோகிகள் என்று மக்கள் கருதுவதாக ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:
மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. மீதான நம்பிக்கையை மறுபரிசீலனை செய்து வெற்றியடைய வைத்ததற்காக மத்தியப் பிரதேச மக்களுக்கு எனது நன்றி.
இந்த வெற்றிக்கு முதலில் பிரதமர் நரேந்திர மோடியின் உயர்ந்த தலைமை, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் முக்கியக் காரணம்.
அடுத்ததாக, ம.பி.யின் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மாநிலத் தலைவர் வி.டி. சர்மா உள்ளிட்ட பாஜகவின் மாநிலத் தலைவர்கள் பாராட்டுக்குரியர்கள். மேலும் இந்த முடிவைச் சாத்தியமாக்க அனைவரும் ஒரே அணியாக நின்று பணியாற்றினர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (ஈ.வி.எம்) ஹேக் செய்து சேதப்படுத்தலாம் என்ற முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங் கூறி இருக்கிறார். ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் வேறு என்ன செய்ய முடியும். மக்கள் தீர்ப்பை நீங்கள் ஏற்கவில்லை என்றால் மக்கள் உங்களைத் தொடர்ந்து ஒதுக்கி வைப்பார்கள் திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்.
இந்த உறுதியான வெற்றியைப் பற்றி கமல்நாத் திக்விஜய் சிங் ஆகியோரிடம் நான் சொல்ல விரும்புவது எதுவுமில்லை. ஏனெனில் இந்தத் தீர்ப்பின் மூலம் மத்தியப் பிரதேச மக்கள் அவர்களிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசத்திற்கு யாரேனும் துரோகிகள் இருந்தால் அவர்கள் திக்விஜய் சிங் கமல்நாத் ஆகிய இருவரும்தான் என மத்தியப் பிரதேச மக்கள் கருதுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.