சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி, இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பல்வேறு இடர்பாடுகளை கடந்து தற்போது தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. நாளை 8-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.