முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு ஐ.பி.எல் தொடரில் எஞ்சிய போட்டிகள் நடைபெற்றால் விளையாடுவேன்: ஆர்ச்சர் நம்பிக்கை

சனிக்கிழமை, 15 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : ஐ.பி.எல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாடுவேன் என இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆர்ச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆறு நகரங்களில்... 

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐ.பி.எல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐ.பி.எல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐ.பி.எல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக அகமதாபாத், டெல்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

வீரா்களுக்கு பாதிப்பு 

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐ.பி.எல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐ.பி.எல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

ஆடுவது சந்தேகமே...

ஐ.பி.எல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள் இந்த வருடம் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இப்போட்டியில் இங்கிலாந்து வீரர்களால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில், இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட்டின் இயக்குநர் ஆஷ்லி கைல்ஸ் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 

பின்னடைவாக...

ஐ.பி.எல் 2021 போட்டியில் சி.எஸ்.கேவின் மொயீன் அலி, சாம் கரண், ராஜஸ்தானின் ஜாஸ் பட்லர், சன்ரைசர்ஸின் ஜானி பேர்ஸ்டோவ் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் ஐ.பி.எல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடாமல் போனால் சி.எஸ்.கே உள்ளிட்ட அணிகளுக்குப் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ச்சர் நம்பிக்கை...

இந்நிலையில் ஐ.பி.எல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாட ஆர்வமாக உள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆர்ச்சர் கூறியுள்ளார். காயம் காரணமாக இந்த வருடப் போட்டியின் முதல் பாதி ஆட்டங்களில் இருந்து அவர் விலகினார். இந்நிலையில் மீதமுள்ள ஐ.பி.எல் ஆட்டங்களில் விளையாடுவது பற்றி ஒரு பேட்டியில் ஆர்ச்சர் கூறியதாவது.,

விளையாடுவேன்... 

இந்தியாவின் தற்போதைய சூழல் மோசமாக உள்ளது. ஐ.பி.எல்-லில் விளையாட இந்தியாவுக்கு நான் சென்றிருந்தாலும் இந்நேரம் இங்கிலாந்துக்குத் திரும்பிருப்பேன். மீண்டும் ஐ.பி.எல் 2021 போட்டி நடக்கும்போது அதில் விளையாடுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து