முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறு கடனாளர்கள் கடன்களை திரும்ப செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும்: 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்: மத்திய நிதியமைச்சர் - ரிசர்வ் வங்கி கவர்னர் கவர்னரை வலியுறுத்த கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 8 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் செலுத்த அவகாசம் வழங்க ரிசர்வ் வங்கியை வலியுறுத்த 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். ரூ. 5 கோடி வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து சிறு கடனாளர்களுக்கும் கடனை திருப்பி செலுத்த 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். சிறு கடனாளர்களுக்கு 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சரை வலியுறுத்த 12 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

கொரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறு கடனாளர்கள், இரு காலாண்டுகளுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவது தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான மிகச்சரியான ஒற்றைப் பேரமைப்பாக ஒன்றிய அரசே செயல்பட வேண்டும் என்னும் கருத்தினை மாநில முதல்வர்கள் பலர் சுட்டிக்காட்டினோம் என்றும், ஒன்றிய அரசே முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்திய நிலையில், நம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் காரணமாக, இந்தியப் பிரதமர் தனது முந்தைய கொள்கையை  மாற்றியமைத்துள்ளார் என தமிழக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில், கடனாளர்களை, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்களை, கொரோனா பெருந்தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின் போது, வெவ்வேறு தன்மைகளில் நடத்தும் பிரச்சினை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியமென தமிழக முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

2021 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் போன்ற நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை என்பதால், கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைத்து, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு தாம் கொண்டு சென்றுள்ளதாகவும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.  

எனவே, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, ரூ.5 கோடி வரையில் நிலுவைகளைக் கொண்டுள்ள அனைத்துச் சிறு கடனாளர்களுக்கும், குறைந்த அளவு 2021-2022 ஆண்டின் முதல் இரு காலாண்டுகளுக்கு, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கருத்தினை ஒன்றிய நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகிய இருவரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டுமென 12 மாநில முதல்வர்களை கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் தெரிவித்து, இக்காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து