முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தயார்: கேரள அரசு

வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம்: குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த கேரள அரசு தயாராக இருப்பதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று தெரிவித்தார்.  மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் வாகனத்திலிருந்தபடியே தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மகளிர் கல்லூரியிலுள்ள இதற்கான தடுப்பூசி மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பார்வையிட்டார்.  இதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, 

வாகனத்திலிருந்தபடியே தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மையங்களின் சிறப்பம்சம், மக்கள் தங்களது வாகனங்களிலிருந்து இறங்காமலே பதிவு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டு பரிசோதனையும் செய்துகொள்ளலாம். தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு யாருக்கேனும் பிரச்னை ஏற்பட்டால் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அங்கேயே வழங்கப்படும். இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்படும். 

18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவருக்கும் செப்டம்பர் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது அரசின் இலக்கு.  தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 52 சதவிகிதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 19 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் இது கூடுதல் சராசரி. கேரளத்தில் நிறைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் அதிகமாக உள்ளது. கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதால், ஓணம் பண்டிகையின்போது அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்வும் வாழ்வியலும் முக்கியம்தான், சுயபாதுகாப்பு அதைவிட முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து