முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      ஆன்மிகம்
Sekarbabu 2022 05 10

மதுரை, ராமேஸ்வரம் உள்பட 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதில் 90 சதவீத பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- கடந்த ஆண்டு சட்டமன்ற அறிவிப்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு அதில் 90 சதவீத பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் இந்தாண்டு மானியக் கோரிக்கையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படுத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இக்கூட்டத்தில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

கோவில் யானைகளுக்கு புதிய குளியல் தொட்டி அமைப்பது தொடர்பாகவும், மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் 12 பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் 108 திருவிளக்குப் பூஜைகள் நடத்துவது தொடர்பாகவும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து