முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வரும் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் : செப். 6-ல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      ஆன்மிகம்
madurai-kovil

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகிற 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் நான்கு ஆவணி மூல வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும் அம்மனும் வீதியுலா வருவர். அதனை தொடர்ந்து வரும்  29-ம் தேதி முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை 12 நாட்கள் 12 திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெறும். 

வரும் 29-ம் தேதி மூல உற்சவ முதல் திருநாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல், 30-ம் தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல்,  31-ம் தேதி மாணிக்கம் விற்றல், செப்டம்பர் 1-ம் தேதி தருமிக்கு பொற்கிழி அருளியது,

செப்டம்பர் 2-ம் தேதி உலவாக்கோட்டை அருளியது, செப்டம்பர் 3-ம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், செப்டம்பர் 4-ம் தேதி வளையல் விற்றல், செப்டம்பர் 5-ம் தேதி நரியை பரியாக்கியது, செப்டம்பர் 6-ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை, செப்டம்பர் 7-ம் தேதி விறகு விற்ற படலம் ஆகிய திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மன் ஆட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரர் ஆட்சியும் நடைபெறும் வழக்கத்தின் அடிப்படையில் செப்டம்பர் 4-ம் தேதியன்று இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வு நடைபெறும். 

செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்வை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலையில் கோவிலில் இருந்து புறப்பட்டு புட்டுத்தோப்புக்கு சென்று உற்சவம் முடிந்து இரவு 9:30 மணிக்கு கோவிலுக்கு வந்தடைவர்.

அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் வடக்கு கோபுர வாசல் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 8 மணி வரையும் கண்டுகளிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து