முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை: நாடு முழுவதும் 56 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      இந்தியா
CBI 2022--09-24

Source: provided

புதுடெல்லி : குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ நேற்று நாடு முழுவதும் பெரிய அளவிலான சோதனை ஒன்றில் ஈடுபட்டது. "ஆபரேஷன் மேக்-சக்ரா" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனை 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 56 இடங்களில் நடத்தப்பட்டது.

சமூக வலைதளங்களில் குழந்தைகளை வைத்து உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்கள், படங்களை பகிரும், மைனர்களை மிரட்டும் தனிநபர், குழுக்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக ஆபரேஷன் மேக்- சக்ரா என்ற மிகப்பெரிய சோதனை நடத்தப்பட்டது.

சிபிஐ- ன் இந்த நடவடிக்கை இண்டர்போல் போலீஸாரின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக ஊடகத்தின் பல்வேறு தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட, பரிமாறிய நபர் குறித்த தகவல் சிங்கப்பூர் இண்டர்போல் அதிகாரிகள் வழியாக சிபிஐக்கு கிடைத்தது.

முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், "ஆபரேஷன் கார்பன்" என்ற பெயரில் இதுபோன்ற ஒரு சோதனையை சிபிஐ நடத்தியது. நாடுமுழுவதும் 76 இடங்களில், 83 நபர்களிடம் நடத்தப்பட்ட அந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் கடந்த வாரத்தில், குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்களை புழக்கத்தில் விடுபவர்கள் குறித்த வழக்குகளை கண்காணிப்பது தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இண்டர்போலில் சிபிஐயும் ஒரு அங்கத்தினராக இருக்கிறது. சர்வதேச அளவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் (ஐசிஎஸ்இ) படங்கள், வீடியோ பற்றிய தகவல்களைக் கொண்ட இந்த அமைப்பின் மூலம் குழந்தை பாலியல் சுரண்டல் பற்றிய தகவல்களை உறுப்பு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ள முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து