முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுகிறார் என அறிவிப்பு : இரட்டை இலை வெற்றிக்கு பாடுபடுவோம் என பேட்டி

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
OPS 2023 01 28

Source: provided

சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார். இரட்டை இலை சின்னம் எந்த வகையிலும் முடங்கி விடக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கம் இரட்டை இலை வெற்றி பெற வாக்குகள் கேட்போம் என கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தே.மு.தி.க., நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகியவையும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. நடிகர் கமலஹாசனின் ம.நீ.ம. கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி  தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில்  எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து நடந்த விசாரணையை அடுத்து சுப்ரீம் கோர்ட் ஓ. பன்னீர் செல்வம் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருங்கிணைந்த ஒரு வேட்பாளரை அ.தி.மு.க. அவைத் தலைவர் பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இதனை தொடர்ந்து தென்னரசுவை வேட்பாளர் என குறிப்பிட்டு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்து பெறப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் அந்த ஆதரவு கையெழுத்துடன் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் அதனை ஒப்படைத்தார். 

இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த மூத்த தலைவர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும். அதற்காக வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுகிறோம் என அறிவித்தனர். 

இது குறித்து முன்னாள் அமைச்சரும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளருமான கு.ப.கிருஷ்ணன் கூறியதாவது:- 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார். இரட்டை இலை சின்னம் எந்த வகையிலும் முடங்கி விடக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கம் இரட்டை இலை வெற்றி பெற வாக்குகள் கேட்போம். தென்னரசுக்காக அல்ல என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து