Idhayam Matrimony

ராகுல்-ஜடேஜா பொறுப்பான ஆட்டம்: ஆஸி.க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2023      விளையாட்டு
India 2023 03 17

Source: provided

மும்பை : கே.எல். ராகுல் மற்றும் ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

சுற்றுப்பயணம்... 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகியுள்ளதால், அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்துகிறார்.

சிராஜ் பந்துவீச்சில்... 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி தொடக்க வீரர்களாக டிரேவிஸ் ஹெட் , மிட்சேல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் டிரேவிஸ் ஹெட் 5 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் ஸ்மித் களமிறங்கினார்,அவர் நிதானமாக விளையாடினார்.

188 ரன்களுக்கு...

மார்ஷ் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார்.மறுபுறம் ஸ்மித் 22 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் குவித்து வெளியேறினார் . தொடர்ந்து லபுசேன் 15 ரன்கள் , ஜோஷ் இங்கிலிஷ் 26 ரன்கள் , கேமரூன் கிரீன் 12 ரன்கள் ,ஸ்டாய்னிஸ் 5 ரன்கள் , மேக்ஸ்வெல் 8 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி   10 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கோலி - சூர்யகுமார்...

இந்தியா சார்பில் முகமது ஷமி ,சிராஜ் தலா 3 விக்கெட் , ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.தொடர்ந்து 189ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.  தொடக்க வீரர்களாக இஷான் கிஷான், சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கத்தில் இஷான் கிஷான் 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த விராட் கோலி 4 ரன்கள், சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கில் 20ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தடுமாற்றம்...

இதனால் இந்திய அணி 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கே.எல்.ராகுல் , ஹார்திக் பாண்டியா இணைந்து நிலைத்து ஆடினர். ஹார்திக் 25 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து கே.எல் . ராகுல் , ஜடேஜா அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர் .சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார்.

5 விக்கெட்...

இறுதியில் இந்திய அணி 39.5 ஓவர்களில் 191ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 75ரன்களும் , ஜடேஜா 45ரன்களும் எடுத்தனர்.ஆஸ்திரேலியா சார்பில் மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட் , ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தனர். இந்த வெற்றியால் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நேரில் கண்டு ரசித்த ரஜினி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் ஆட்டத்தைக் நேற்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார். மும்பை வான்கடே விளையாட்டுத் திடலில் நடைபெறும் ஒருநாள் ஆட்டத்தைக் காண நடிகர் ரஜினிகாந்த் நேற்று வருகை தந்தார். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவும் ரஜினியும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே உரையாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து