முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      தமிழகம்
Satyaprata-Saku

Source: provided

சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம், தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான்று வாக்குப்பதிவு சதவீதத்தில் முரண்பாடு ஏற்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிவேற்றம் செய்வதற்கு ஒரு செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது முதல் அனைத்து தகவல்களும் இந்த செயலியில்தான் பதிவேற்றம் செய்யப்படும்.

இதன்படி வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை அலுவலர்கள் தங்களது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை இந்தச் செயலியில் பதிவேற்றம் செய்வார்கள். 

இதன்படி ஒரு சில வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவேற்றம் செய்தார்கள். ஆனால், ஒரு சில வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்கு சதவீதத்தை பதிவேற்றம் செய்யவில்லை.

மேலும், செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, ஒரு சில வாக்குச்சாவடியில் இருந்து அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியிடப்பட்டது. 

அந்த வாக்குப்பதிவு சதவீதம் தோராயமானது தான். தேர்தல் ஆணையத்தின் செயலியிலும் இந்த வாக்குப்பதிவு சதவீதம் தோராயமானது என்றுதான் தெரிவித்து இருப்பார்கள். 

எனவே, செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது. வாக்குப்பதிவு தொடர்பாக வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் தங்களின் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குப்பதிவு தொடர்பான 17C ஆவணத்தை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அளிப்பர்.

இந்த 17C ஆவணத்தின் அடிப்படையில் தான் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவேற்றம் செய்வார். இதன்படி வரும் தான் தகவல் தான் இறுதியானது என்றார்.

அப்போது அவரிடம், வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டது தொடர்பான புகார்கள் தொடர்பான கேள்விக்கு விளக்கம் அளித்த அவர், 

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் விடுபட்டது தொடர்பாக case by case விசாரணை நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க மற்றும் திருத்தம் (special summary revision) நடக்கும் போது வாக்காளர் பதிவு அதிகாரிகள் அனைவரும், வாரந்தோறும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்துவார்.

அந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வாக்காளர்கள் அளித்த விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அளிப்பர். அந்த நேரத்தில் அரசியல் கட்சிகளின் முகவர்களும் வாக்காளர் பட்டியலில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தெரிவிக்கலாம். 

இதுபோன்ற நடைமுறைதான் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் , சரிபார்க்கவும் தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. 

ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால் எளிதாக பெயரை சேர்க்க முடியும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து