முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 யூனிட் விலையில்லா மின்சாரம், எளியோருக்கு தொடர்ந்து கிடைக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : 100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளியோருக்கு தொடர்ந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

அ.தி.மு.க. ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால், அந்த வீட்டின் உரிமையாளரும், வீட்டில் வாடகைக்கு உள்ளவர்களும், 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தைப் பெற்று வந்தனர். 

தற்போது, இந்த தி.மு.க. அரசின் மின் வாரியம் வீட்டின் உரிமையாளர் பெயரில் ஒரு மின் இணைப்பு மட்டுமே அனுமதிக்க உள்ளதாகவும், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

வீடு வாடகைக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களே ஆவார்கள். எனவே, அவர்கள் மின்சாரத்திற்காக கூடுதலாக செலவு செய்கின்ற நிலை ஏற்படும்.  இதுபோன்றே, வணிக நிறுவனங்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், ஒரு மின் இணைப்பை மட்டும் விட்டு விட்டு, மற்ற இணைப்புகளைத் துண்டிக்கவும் இந்த தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க. ஆட்சியில், மின் கட்டணம் செலுத்துவதற்கு 20 நாட்கள் கால அவகாசம் இருந்த நிலையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால், மின் துறை ஊழியர்கள்  நேரில் சென்று மின் கட்டணம் கட்டாதவர்களிடம், உடனடியாக மின் கட்டணம் செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி மின் கட்டணத்தை செலுத்த வைப்பார்கள். 

தற்போது இந்த தி.மு.க. ஆட்சியில், மின்சாரத் துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் மின் கட்டணம் செலுத்த இயலாதவர்களிடம் நேரில் சென்று மின் கட்டணம் கட்ட கடைசி நாள் என்ற எச்சரிக்கையை யாரும் தெரிவிப்பதில்லை என்றும்  செய்திகள் மூலம் தெரிய வருகிறது. 

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட 100 யூனிட் விலையில்லா மின்சாரம், அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்று  இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து