முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டி-20 கிரிக்கெட்: கோலி, ரோகித், ஜடேஜா ஓய்வு

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024      விளையாட்டு
INDIA-2 2024-06-30

Source: provided

பார்படாஸ் : விராட் கோலியைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் ஒரு வீரராக ரவீந்திர ஜடேஜாவும் இதில் இணைந்துள்ளார்.

ஆட்ட நாயகன் விருது... 

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதன்போது இதுவே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அவர் அறிவித்தார். விராட் கோலியை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். வரலாற்று வெற்றிக்கு சில நிமிடங்களுக்கு பிறகு கோலி தனது ஓய்வை அறிவித்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர் சந்திப்பில் ஓய்வை அறிவித்தார். எனினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடுவதை உறுதிப்படுத்தினார் ரோகித்.

ரோகித்தும் ஓய்வு...

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, "டி20 கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே அதனை ரசித்து விளையாடி வருகிறேன். இந்திய அணிக்காக நான் விளையாட தொடங்கியதும் டி20 போட்டிகளில் இருந்துதான். எனவே, கோப்பையை வெல்ல வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவு. சொல்லப்போனால் மிக தீவிரமாக அதில் ஆசை கொண்டிருந்தேன். இம்முறை அது நிறைவேறியதில் மகிழ்ச்சி. இத்தனை வருடங்களாக நான் எடுத்த ரன்களை விட, இந்தியாவுக்காக போட்டிகளையும், கோப்பைகளையும் வெல்வதே பெரிது. விடைபெற இதைவிட சிறந்த தருணம் இருக்காது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் எனது பங்களிப்பு இருக்கும்" என்று தெரிவித்தார்.

159 போட்டிகளில்... 

2007ல் முதன்முதலில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடர் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ரோகித் சர்மா, இதுவரை 159 போட்டிகளில் 4231 ரன்களை குவித்து இந்த பார்மெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்த ரோகித் சர்மா, தற்போது கேப்டனாகவும் இந்தியாவை கோப்பையை வெல்ல வைத்துள்ளார்.

ஜடேஜாவும் அறிவிப்பு...

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுகிறேன். ஒரு வலிமையான குதிரை துள்ளிக் குதிப்பதைபோல, எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். டி20 உலகக்கோப்பையில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு நினைவாகிவிட்டது. இது எனது உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி.ஜெய்ஹிந்த். ரவீந்திரசிங் ஜடேஜா" என்று பதிவிட்டுள்ளார்.

ரோகித்-கோலி சாதனைகள்

ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை விளையாடி உள்ளார். 159 டி20 போட்டிகள். இவருக்கு அடுத்த இடத்தில் பால் ஸ்டிர்லிங் 145 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இவர் டி20 போட்டிகளில் 4231 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 4188 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கிளென் மேக்ஸ்வெல்-உடன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 205 சிக்சர்களை விளாசிய ரோகித், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். நவம்பர் 2022 மாதம் விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை விராட் கோலி பாபர் அசாமுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 39 அரைசதங்களை அடித்துள்ளனர்.

டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 15 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். ஆட்ட நாயகன் போன்றே தொடர் நாயகன் விருதுகளை அதிகம் வென்றவர்கள் பட்டியலிலும் விராட் கோலி தான் முதலிடம் பிடித்துள்ளார். இவரை இதுவரை 7 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து