முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      தமிழகம்
Eps   2024-12-02

Source: provided

சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார். முதலில் சிங்காநல்லூர் தொகுதியில் ரோடு ஷோ சென்ற இ.பி.எஸ்.க்கு கும்ப மரியாதையுடன் பெண்கள் வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து ஜி.வி ரெசிடென்சி இணைப்புச் சாலையில் குழுமியிருந்த மக்களிடையே இ.பி.எஸ். உரையாற்றினார்.

“கோவை என்றாலே தமிழ்நாட்டில் தொழில் நிறைந்த மாவட்டம்.  தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இங்கு 3 ஷிப்ட்டும் தொழில் சிறப்பாக நடைபெற்றது. தி.மு.க. அவல ஆட்சியில் ஒரு ஷிப்ட் தான் நடக்கிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதுதான். மீண்டும் தொழில் நிறைந்த மாவட்டமாக இதனை உருவாக்கிக்கொடுப்போம். 

சிங்காநல்லூரில் ரயில்வே மேம்பாலம் தொடங்கி பிருந்தாவன் நகர், ஏர்போர்ட் சாலை வழியாக அவிநாசி சாலை முடிய லிங்க் ரோடு போடுவதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் நிலங்களை எல்லாம் எடுத்து திட்டம் தொடங்கியபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டத்தை முடக்கிவிட்டனர், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மேம்பாலம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி எல்சி 6ல் மேம்பாலப் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது, தி.மு.க. திட்டமிட்டு திட்டத்தை விரைவுபடுத்தாமல் விட்டது, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். திருச்சி சாலையை இணைக்கும் பணியை விமான நிலையத்துக்கு ஒப்படைத்துள்ளனர், அதை மாநில அரசே எடுத்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள், அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். 

நீங்கள் கேட்ட இடங்களில் எல்லாம் பாலம் கட்டிக்கொடுத்தோம், விமான நிலைய விரிவாக்கம் கூட அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது, தி.மு.க. ஆட்சியில் முடங்கிக்கிடக்கிறது, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் விரைந்து விரிவாக்கப் பணிகள் முடித்துக்கொடுக்கப்படும்.  பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டப் பணிகள் கொண்டுவரப்பட்டதும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். தமிழ்நாட்டிலேயே நீளமான ஒரே பாலம் 10 கிலோமீட்டர், அவிநாசி சாலையில் இருந்து உப்புளிபாளையம் வரை உயர்மட்டப் பாலம், அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்தோம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 1950 கோடியில் இத்திட்டத்தைக் கொடுத்தோம். இது சாதாரண திட்டமில்லை, இன்னும் 10 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் வரப்பிரசாதமாக இருக்கும். சாலையை விரிவாக்கம் செய்யமுடியாது, அதனால் திட்டமிட்டு கண்டறிந்து அதற்கேற்றவாறு உயர்மட்டப் பாலம் அமைத்தோம். 

அ.தி.மு.க. 10 ஆண்டுகாலத்தில் எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார், அதனால்தான் இதனை சொல்கிறேன். இந்த ஒரு தொகுதியிலே இவ்வளவு கொடுத்தோம். கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும். தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் இல்லை, அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதுதான் தி.மு.க. அரசின் சாதனை. நாம் கட்டிய பாலம், அதனை திறந்துவைத்து ஸ்டாலின் போகிறார், சிறப்பாக கட்டப்பட்டிருப்பதாகச் சொல்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கும், தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் என்றால், அது ஆற்றில் அடித்துச்சென்றுவிடும். தென்பெண்ணை ஆற்றில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதத்திலேயே வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. 

இது ஜனநாயகமுள்ள கட்சி. கொரோனா காலத்தில் விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், தொழிலாளர்களுக்கு தேவையான நிதி கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம்.  அதேயாண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தோம். மக்கள் துன்பப்படும் போதெல்லாம் காப்பாற்றிய அரசு அ.தி.மு.க. அரசு. மீண்டும் அ.தி.மு.க. அரசு மலரும், உங்களது தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து