முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வாரிய ஊழியர்கள் 5 பேர் குடும்பத்தினருக்கு நிதியுதவி

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.25 - விபத்தில் மரணமடைந்த மின்வாரிய ஊழியர் 5 பேரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மூன்று பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் ரூபாயும் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், ஆவரம்பட்டி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மஸ்தூராகப் பணிபுரிந்து வந்த திருமுருகன் என்பவர் 22.5.12 அன்று ஜெயலட்சுமி பயர்ஒர்க்ஸ் என்ற தொழிற்சாலையில் மின்மாற்றியில் ப்யூஸ் ஒயர் பொருத்தும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும், வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து பணியாளர்கள் 22.5.12 அன்று சிமெண்ட் கம்பங்களை டிராக்டர் டிரெய்லரில் ஏற்றி கொண்டு சென்றபோது, டிரெய்லர் கவிழ்ந்ததில், டிரெய்லரில் பயணம் செய்த மோகன், நாகேந்திரன், கோபால் மற்றும் சிவலிங்கம் ஆகிய நான்கு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிக்க துயருற்றேன்.
மேலும்,  இவ்விபத்தில் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிருவாகத்தினருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமுருகன், மோகன், நாகேந்திரன், கோபால் மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணியின்போது காலமான திருமுகன், மோகன், நாகேந்திரன், கோபால் மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்தகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று பேருக்கு தலா 25,000 ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு  முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்