முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.450 கோடி செலவில் 2 சுற்றுலா திட்டங்கள் அமல்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.9 - ஆசிய வளர்ச்சி வங்கி உதவியின் கீழ் ரூ.450 கோடி செலவில் 2 சுற்றுலா திட்டங்கள் அமுல்படுத்த மாநில சுற்றுலா வழிபடுத்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி  ஆசிய வளர்ச்சி வங்கி  நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் சுற்றுலா உள்கட்டமைப்பு  மேம்பாட்டு முதலீட்டு  திட்டத்தின்    மாநில  அளவிலான  வழிப்படுத்தும்   குழுவின்   முதல்   கூட்டம், நேற்று (8.8.2012)  தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு மாநிலங்களில்  (பஞ்சாப், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு) தமிழகம் மட்டுமே தென் இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.   சுற்றுலா அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக, விரிவான பொருளாதார மேம்பாடு, உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகள் அளித்தல் ஆகியவை இந்த முதலீட்டுத் திட்டத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இயற்கை மற்றும் பண்பாட்டு வளங்களை பாதுகாத்திடவும், வளர்த்திடவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே ஆணையிட்டு இருந்தார்.  

நேற்று 8.8.2012  காலை  11.30 மணியளவில்  சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா தலைமையில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி உள்ளிட்ட இத்திட்டத்தின் மாநில அளவிலான வழிப்படுத்தும்  குழுக் கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்களான  அரசு தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை, முதன்மைச் செயலாளர்/ சுற்றுலா ஆணையர் மற்றும்  இக்குழுவில் உறுப்பினராக உள்ள இதர அரசு துறைச் செயலாளர்களும்  கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த உறுப்பினர்கள் அனைவரையும் அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா இத்திட்டம்  இரண்டு பெரிய சுற்றுலா சுற்றுக்களை   உள்ளடக்கியது என்று தெரிவித்துள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலாச் சுற்று ( ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய சுற்று)  இச்சுற்று காஞ்சிபுரம், கடலுர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். தென்னக சுற்றுலாச் சுற்று ( ஆன்மீகம்  மற்றும்  சுற்றுச் சூழல் சுற்று)  இச்சுற்று  புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, இராமநாதபுரம்,  திருநெல்வேலி,  துத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். 

ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி திட்டத்தின்கீழ் ,  அடிப்படை வசதிகளின் தரம்  உயர்த்தப்படுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை  அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ஐந்து ஆண்டுகளில் ஆசிய வளர்ச்சி வங்கியின் மொத்த ஒதுக்கீடு உத்தேசமாக ரூபாய் 450 கோடியாகும். இத்திட்டத்தின்  முதற்கட்டமாக,  கிழக்கு கடற்கரை  சாலை சுற்றுலா சுற்றும், அதனைத் தொடர்ந்து  தென்னக சுற்றுலா சுற்றும்  எடுத்துக்கொள்ளப்படும்.  ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் மூலம்  பின்வரும்  இலக்குகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் வளரும் சுற்றுலாத் தலங்களில் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற அடிப்படை வசதிகள் மற்றும் இதர சேவைகளை மேம்படுத்துதல்,   சுற்றுலாத்தலங்களில் மேம்படுத்தப்பட்ட சாலை தொடர்பு வசதிகளை கடைசி இலக்குவரை  மேம்படுத்துத்தல், சுற்றுலாப் பயணிகளின் வசதிகள் மற்றும் பாதுகாப்புகளுக்காக சுற்றுலாத் தலங்களில் இயற்கை மற்றும் கலாச்சார சுற்றுலாப் கவர்ச்சிகளை தரம் உயர்த்துதல், சுற்றுலா தொடர்பான பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் உள்ளூர்வாசிகளின் மிகப் பெரிய பங்களிப்பை  ஊக்குவித்தல், சுற்றுலா திட்டங்களை நிறைவேற்றும் முகமைகளின் திறனை விரிவாக்குதல், திட்ட வளர்ச்சி  மற்றும் மேலாண்மையில் சமூக பங்கேற்பு, கவர்ச்சிக்கர சுற்றுலாத் தலங்ககள வர்த்தகப்படுத்துதல் மற்றும் சிறுவியாபாரம் மற்றும் தனியார்துறை பங்கேற்பை  மேம்படுத்துதல்.

கீழ்கண்டவைகளுக்கு மாநில அளவிலான வழிப்படுத்தும்  குழு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து வசதிகளுடன் சென்னையில் திட்ட மேலாண்மை அலுவலகம் அமைத்தல்,  நாகப்பட்டினம்  மாவட்டம்,  nullம்புகாரில் திட்ட செயலாக்க அலுவலகம் அமைத்தல்.

இத்திட்டத்திற்காக திட்ட மேலாண்மை ஆலோசகர், வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசகர் ஆகியோரை நியமிப்பதற்கு தமிழக சுற்றுலாத்துறைக்கு  இக்குழுவால்    அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தினை உரிய காலத்திற்குள் விரைவில் செயற்படுத்திட தமிழக சுற்றுலாத்துறைக்கு இக்குழுவால்    அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  சுற்றுலாத் துறை அமைச்சர்  மற்றும்  அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர்  இத்திட்டத்தின் முதற்கட்ட பணியினை உடனடியாக துவங்கி வேகமாக   செய்திட   சுற்றுலாத்துறையை  அறிவுறுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்