முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம்..!

வியாழக்கிழமை, 3 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. ஜன.4  - தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் திருச்சி மாயாஸ் ஓட்டலில் நேற்று(3ந்தேதி) தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.என்.அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கூடுதல் தலைவர் அபிராமி ராமநாதன், பொது செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ஹரி, இணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மாநில தலைவர் சேலம் முருகேசன், மதுரை செல்வின்ராஜ், மதுரை ஷாகுல் ஹமீது, கோவைராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. நெல்லை மலைராஜா, திருச்சி பிரான்சிஸ், நாமக்கல் மோகன், மன்னார்குடி சரவணன், தாமஸ், ரம்பா ஊர்வசி லோகநாதன், மரியம் தியேட்டர் அதிபர் ஆசிக் மீரா உள்பட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். 

காலையில் தொடங்கிய இந்த அவசர கூட்டத்தில் திரைப்பட நடிகர் கமல் நடித்து வெளியிட உள்ள `` விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்கள் திரையிடுவதற்கு முன்பாகவே டி.டி.எச்.ல் வெளியிட நடிகர் கமலஹாசன் எடுத்துள்ள முடுவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்பு தியேட்டர்கள் உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை  அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம், விநோகஸ்தர்கள் பெடரேசனின் தலைவர் சேலம் முருகேசன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். 

திருச்சியில் இன்று(3ந்தேதி) அனைத்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டுக்குழு கூட்டம் கூடி விஸ்வரூபம் படம் பற்றியும், நடிகர் கமலஹாசன் எடுத்துள்ள முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் டி.டி.எச் மூலம் ஒருதிரைப்படத்தை வெளியிட்ட பின்பு அதைத்தொடர்ந்து திரைப்பட விநியோகஸ்தர்கள் யாரும் வாங்குவதில்லை எனவும், டி.டி.எச் மூலம் தியேட்டரில் வருவதற்கு முன்பாக வெளியிடப்பட்டால் அந்த திரைப்படத்தை தியேட்டர்களில் திருட மாட்டோம் என முடிவு செய்யப்பட்டது. 

காரணம் டி.டி.எச்சில் வெளியிட்ட பின்பு ரசிகர்கள் யாரும் தியேட்டர்களுக்கு வர மாட்டார்கள். நடிகர் கமலஹாசன் இந்த முடிவு எடுக்கும் நிலைக்கு எங்களை தள்ளப்பட்டுவிட்டார். இந்த பிரச்சனையை முதல்வர் அம்மாவை நாங்கள் சந்தித்து தெரியப்படுத்துவோம். அவர் நல்ல முடிவு எடுப்பார். எப்பொழுதும் முதல்வர் அம்மா திரைப்படத்துறையினருக்கு ஆதரவாக இருப்பார்கள். எனவே அவர் இந்த விஷயத்தில் எங்களுத்து உறுதுணையாக இருப்பார் எனவும் நம்புகிறோம். 

டி.டி.எச் மூலம் ஒரு திரைப்படத்தை வெளியிட்ட பிறகு அதை தியேட்டரில் திரையிட மாட்டோம் என்று ஏற்கெனவே மும்பை, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். டி.டி.எச் முறை, அமெரிக்க நாட்டில் கூட இல்லை. எங்களது திரைத்துறையை காப்பாற்ற இதுதான் ஒரேவழி. எங்களை நம்பி 2 லட்சம் குடும்பங்கள் உள்ளது. நாங்கள் அழிந்துவிட்டால் திரைப்படத்துறை வளராது. ஆகவேதான் முதல்வர் அம்மாவை சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் ஏற்கெனவே 2800 திரையரங்குகள் உள்ளது. இதில் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. தற்பொழுது 1200 திரையரங்குகள்தான் உள்ளது. 

முதலில் டி.டி.எச் மூலம் திரையிட்டு விட்டால், தியேட்டர்களுக்கு படம் பார்க்க எந்த ரசிகர்களும் வரமாட்டார்கள். நடிகர் கமலஹாசன் நடித்துள்ள திரைப்படங்களை நாங்கள்தான் மூலை முடுக்கெல்லாம் போஸ்டர் ஒட்டி அவருக்கு சினிமா திரைப்படத்துறையில் புகழை பெற்றுத்தந்தோம். பெரிய திரையில் நடித்து விட்டு யாரும் சின்னத்திரைக்கு செல்வதில்லை. நடிகர் கமலஹாசன் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க முயற்சிக்கிறார். அவர் நல்லவர். பெரிய நடிகர், ஏன் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார் என தெரியவில்லை.  எங்கள் முடிவுக்கு அனைத்து திரையரங்க உரிமையாளர்களும், திரைப்பட விநியோகஸ்தர்களும் உறுதுணையாக இருப்பார்கள். இந்த முடிவுக்கு பின்பு எந்த திரையரங்க உரிமையாளர்களும் கமல் படத்தை வெளியிட்டால் அவர்களுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் படம் தரமாட்டார்கள். இந்த முயற்சியில் நாங்கள் வெற்றிபெறுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின்போது திருச்சி ஸ்ரீதர், மதுரை மாவட்ட சங்க தலைவர் ஷாகுல் ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்