முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீது கே.ஆர். போலீசில் புகார்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.5 - திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பிரச்சினையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணி மீது கே.ஆர். சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்று வரும் பல பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 28.10.2012 அன்று, தலைவராக பதவி வகித்து வந்த எஸ்.ஏ.சந்திரசேகரன்  தலைமையிலான நிர்வாக குழுவினர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபன் இந்த வாக்கெடுப்பை நடத்தி முடித்தார். பல தடைகளுக்குப் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2.2.2013 அன்று அதே நீதிபதி முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாகி இருந்தன. 

நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றி பெற்ற பிறகும் எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் பதவி விலக மறுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் அவர்களின் மேல்முறையீடு கடந்த 7.2.2013 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 4.2.2013 அன்று நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வெற்றி குறித்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினோம். 

அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் அங்கு வந்து கேவலமான வார்த்தைகளால் எங்களை திட்டியதுடன், கலகம் விளைவிக்க முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக கடந்த 5.2.2013 அன்றும் தங்களை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறோம். 

இதற்கிடையே அதே நாளில் (5.2.2013) மத்திய சென்னை மாவட்ட பதிவாளரை சந்தித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் அணியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்தது தொடர்பான கோர்ட்டின் உத்தரவுகளையும், அவர்களுக்கு எதிராக இதுவரை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டினோம். நாங்கள் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய பதிவாளர் 28.2.2013 அன்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாக குழுவை (மொத்தம் 27 பேர்) தகுதி நீக்கம் செய்து கடிதம் அனுப்பினார். வங்கி கணக்குகளையும் முடக்கினார். 

இந்நிலையில் பதிவாளர் எடுத்த நடவடிக்கை பற்றி, பிலிம் சேம்பர் வளாகத்தில் 2.3.2013-ந் தேதி அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது, நான் `நியாயமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி' சொல்லிக் கொண்டிருந்தபோது பாபுகணேஷ் தலைமையில் வந்திருந்த ஒரு கும்பல் திடீரென்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், எங்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி திடீர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்குள் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ.சந்திரசேகரன், கலைப்புலி தாணு, தேனப்பன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தயாரிப்பாளர் சங்கத்தில் கலாட்டா செய்து தாக்குதலில் ஈடுபட்ட, பாபுகணேஷ், ராஜசிம்மன், பாஸ்கர், பாலாஜி, ஜெமினா ராகவா, ரிஷிராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி அன்று இரவே ஆயிரம்விளக்கு காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். 

எஸ்.ஏ.சந்திரசேகரன் கும்பல் தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். மாவட்ட பதிவாளரே அனைத்து நிர்வாகிகளையும் பதவி இழப்பு செய்து விட்ட நிலையில் தங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும், உரிமையும் இல்லை என்று தெரிந்தும், சங்கப் பணத்தை எடுத்து நிலம் வாங்கித்தர சங்கத்தின் சட்டவிதிகளில் இடமே இல்லை என்பது நன்றாக தெரிந்தும் வேண்டும் என்றே ஒரு பொதுக்குழுவை ஏற்பாடு செய்து, தயாரிப்பாளர்களுக்குள் பயங்கர மோதல்களை ஏற்படுத்தி, கலகம் விளைவித்து ஆதாயம் அடைய திட்டம் போடுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.  அவரது அணியினர் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர். 

எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், தகுதியே இல்லாதவர்கள் பிரச்சினை செய்யும் நோக்கத்துடன் வருகிற 24-ம் தேதி நடத்த திட்டமிட்டிருக்கும் கூட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்து, கூட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு  வேண்டுகிறோம். இவ்வாறு புகாரில் கே.ஆர். கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்