முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை - பாதிப்புகளை சரி செய்ய தயார் நிலையில் இருக்க உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள், உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து நிலைகளிலும் அமைச்சர்கள் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி அவர் உத்தரவிட்டார்

21, 597 மீட்பாளர்கள் தயார்

வடகிழக்குப் பருவமழை தொடங்கி கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்தும் தற்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், கடந்த 21-ம் தேதி வெளியிட்ட வானிலை அறிக்கையில்,

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த வடகிழக்கு பருவ மழை தொடர்பான ஆயத்த நிலை குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளின் உயர் அலுவலர்களுடன் ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்பு அலுவலர்கள் மாவட்டங்களில் நேரடியாக ஆயத்த பணிகளை ஆய்வு மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த 24-ம் தேதியும் மற்றும் 4-ம் தேதியும் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் கண்காணிப்புஅலுவலர்கள் பங்கு கொண்ட ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன. வடகிழக்குப் பருவ மழையினால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 4,399பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 639 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9,162 பெண்கள் அடங்கிய 21,597 எண்ணிக்கையிலான முதல் நிலை மீட்பாளர்களும், மேலும் கால்நடைகளை பாதுகாக்க 8,871 முதல் நிலை மீட்பாளர்களும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நடுவதற்கும், பேரிடர் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கு 9,909 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

2.62 ஆயிரம் மி.கன அடி நீர் சேமிப்பு

பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளாக, 17,866 தடுப்பணைகள் கட்டப்பட்டு 14,946 கசிவு நீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 9,250 நீர் செறிவூட்டும் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாத 11,080 ஆழ்துளைக் கிணறுகளும். 3,434 திறந்த வெளிகிணறுகளும், நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. 3,174 கிலோ மீட்டர் நீளம் ஆற்றுப்படுகைகள் தூர்வாரப்பட்டன. 3,662 ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 8,749 பாலங்கள் மற்றும் 1,40,228 சிறு பாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. 7.44 லட்சம் கன மீட்டர் அளவுக்கு தூர்வாரப்பட்டது. இதன் மூலம் 2.62 ஆயிரம் மில்லியன் கனஅடி நீரினை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணை 6.60 லட்சம் விவசாயிகள் நிலத்திற்கு உபயோகித்து பயனடைந்துள்ளனர். மேலும், முடிவு பெறாத பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

நிவாரண மையங்கள், தயார் நிலையில் காவலர்கள்

மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களைத் தவிர, 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2,394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும்இயந்திரங்கள், 2,897 ஜே.சி.பி. இயந்திரங்கள், 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483ராட்சத பம்புகள் தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களாக தயார் நிலையில் உள்ளன. மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தால், 1.00 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நடமாடும் முதல் நிலை மீட்பாளர் குழு ஒவ்வொரு பகுதி / வட்டம் / மண்டல வாரியாக அமைக்கப்பட்டு, அக்குழுக்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படைதவிர, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 4,155 காவலர்கள் (சென்னை நீங்கலாக) அனைத்து கடலோர மாவட்டங்களிலும், 1,844 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தில் 607 காவலர்களும் ஆக மொத்தம் 6,606 பயிற்சி பெற்ற காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

6 ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,537 தீயணைப்பு வீரர்களுக்கும், 1,400 காக்கும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 நபர்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம், டி.என்.ஸ்மார்ட் செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பருவமழை காலத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நோய் பரவலை தடுக்க நடவடிக்கை

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் பிளிச்சிங் பவுடர், மற்ற பொருட்கள், மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பற்றாக்குறையினை தவிர்க்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் நியாயவிலைக் கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் /பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

நீலகிரிக்கு பயிற்சி பெற்ற வீரர்கள்

வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும், குறைக்கவும், அனைத்து துறையினை சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கன மழையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப் படையினரால் பயிற்சி அளிக்கப் பெற்ற 50 வீரர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலிருந்து கூடுதல் தீயணைப்பு வீரர்களை நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பவும், மாநிலத்தில், பாதிப்பிற்குள்ளாகக் கூடிய இடங்களில், தேசிய பேரிடர் மீட்புப் படை செல்வதற்கு தயார் நிலையில் இருக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட திட்டங்களும், அதன் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், உடனடித் தேவைகள் மற்றும் கூடுதல் உபகரணங்கள், சிறப்புக் கருவிகள் போன்றவை வாங்குவதற்கும் 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துணை முதல்வர், அமைச்சர்கள்

இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர். க.சண்முகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், நிதித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் நிர்வாக ஆணையர் / முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர்ககன் தீப் சிங் பேடி, எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) தீரஜ் குமார் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளர் பாலசந்திரன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி கமிஷனர்  பிரகாஷ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் ஜெகந்நாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி, நகராட்சி நிர்வாக ஆணையர் டாக்டர் கே.பாஸ்கரன், பேரூராட்சிகளின் இயக்குநர். எஸ். பழனிசாமி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சி.கே. காந்திராஜன், அனைத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து