முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கையடக்க கணினி கருவியை உருவாக்கிய இளம் மாணவருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

புதன்கிழமை, 28 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியை உருவாக்கிய திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி செல்வன் எஸ்.எஸ். மாதவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் எஸ்.எஸ். மாதவ் சந்தித்து, தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியை காண்பித்து வாழ்த்து பெற்றார். 

திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரில் வசித்து வரும்  சேதுராசனின் மகன்  செல்வன் எஸ்.எஸ். மாதவ், ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டு, கணினி மொழிகளான Java, Python, C, C++, Kotlin  ஆகியவற்றைப் படித்துள்ளார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கையடக்க Mini CPU கண்டுபிடித்து உள்ளதாகவும், இதற்காக இரண்டு ஆண்டுகளாகக் கடுமையாக முயற்சித்து இம்முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்பதைக் கேள்விப்பட்ட முதல்வர், செல்வன் எஸ்.எஸ். மாதவை நேரில் அழைத்துப் பாராட்டினார். இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக Terabyte India CPU Manufacturing Company என்ற நிறுவனத்தினைத் தொடங்கி, இணையதளம் (Online) மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலைக் கேட்டறிந்த முதல்வர் அம்மாணவனை வாழ்த்தினார். 

செல்வன் எஸ்.எஸ். மாதவின் கண்டுபிடிப்பினைப் பாராட்டிய தமிழக முதல்வர், கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.  இந்நிகழ்வின்போது, செல்வன் எஸ்.எஸ். மாதவ் அவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து