முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 18-ம் தேதி தெப்பத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா வரும் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் வருகிற 18-ம் தேதி நடக்கிறது.

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஜப்பசி, மார்கழி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது.  இந்த ஆண்டு தை தெப்பத் திருவிழா வருகிற 7-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவில் சுவாமி சன்னதியில் உள்ள  கொடிமரத்தில்  காலை 10.05 மணிக்கு மேல் 10.29 மணிக்குள் கும்ப லக்கத்தில் திருவிழாவுக்கான  கொடியேற்றம் நடக்கிறது.  

விழா நடைபெறும் 12 நாட்களும் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி  பக்தர்களுக்கும் காட்சி அளிப்பர்.  விழாவில் வருகிற 12-ம் தேதி சைவ சமய வரலாற்று லீலையும், 14-ம்  தேதி வலைவீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது.

தெப்பத்திருவிழாவுக்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 17-ம் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது.  விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் வருகிற 18-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 10.40 மணி முதல் 11.04 மணிக்குள்  எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

காலை 2 முறையும், இரவு ஒரு முறையும்  சுவாமி, அம்மன் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி  அளிப்பர். அதன் பின்னர் இரவு 7 மணிக்கு மேல் சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி மீண்டும் கோவிலுக்கு புறப்படுவார்கள். அன்றைய தினம் சுவாமி தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.  தெப்பத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து