முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாளைக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது: இலங்கை மக்களுக்கு இரு மாதங்கள் மிக கடினமானதாக இருக்கும்: ரணில் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      உலகம்
ranil-2022-05-12

Source: provided

கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். 

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே  நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன்.  நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதை விட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. 

நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் வரும் 19-ம் தேதி மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், வரும் 18-ம் தேதி, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன. இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் ரணில் விக்ரமிசிங்கே பதிவிட்டுள்ளதாவது, அடுத்து வரும் இரு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இது குறித்து பொது மக்களிடம் பொய் கூறுவதற்கு எந்த நோக்கமும் எனக்கு இல்லை. நான் கூறுவது உங்களுக்கு விரும்பத்தகாததாகவும், திகிலூட்டுவதாகவும் இருந்தாலும் உண்மை நிலை இதுதான்.

மின்பற்றாக்குறையை தற்போது உடனடியாக தீர்க்க முடியாததால் ஒரு நாளைக்கு 15 நேரம் மின்சார தடை நீடிக்கும். மருந்து மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாட்டை போக்க தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.  

சவால்களையும், துன்பங்களையும் வரவிருக்கு மாதங்களில் நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். இருப்பினும், இது நீண்ட காலத்திற்கு இருக்காது. வரவிருக்கும் மாதங்களில், நட்பு நாடுகள் எங்களுக்கு உதவுவார்கள். அவர்கள் ஏற்கெனவே இது தொடர்பான ஆதரவை இலங்கைக்கு வழங்கி உள்ளார்கள். 

கடந்த வியாழனன்று ஓர் அரசியல் தலைவராக மாத்திரமல்ல, கொழும்பு பல்கலைக் கழகத்தில் இலவசக் கல்வியைப் பெற்று பயனடைந்த தேசியத் தலைவராகவும்தான் நான் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டேன். நாட்டிற்கான எனது கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன். அதுதான் உங்களுக்கு நான் கொடுக்கும் வாக்குறுதி என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து