முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதகுகளை திறப்பது குறித்து முன்பே தெரிவிக்க வேண்டும்: முல்லை பெரியாறு அணை தண்ணீரை படிப்படியாக திறந்து விட வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      இந்தியா
pinarayee------2022-08-05

Source: provided

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணை தண்ணீரை படிப்படியாக திறந்து விட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கி உள்ள நிலையில் இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே 'ரெட்' அலர்ட் விடுத்துள்ளது. அதற்கேற்ப மழை பெய்கிறது.

இதே நிலை நீடித்தால் அணையின் நீர் மட்டம் கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. இப்போது அணைக்கு அதிகளவு நீர் வரத்து உள்ளது. எனவே முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்திய வானிலை மையம் கணிப்புகளின்படி மழை பெய்வதால் அணைக்கு தண்ணீர் அதிகம் வருகிறது.

இதனால் அணையின் நீர் மட்டத்தை சீராக குறைக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த விசயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அணையின் மதகுகளை திறப்பது குறித்து 24 மணி நேரத்திற்கு முன்பே கேரள அரசுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து