முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படி இருக்கும் : ஓ.பி.எஸ். பேட்டி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
OPS 2021 07 12 - Copy

Source: provided

சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.  

ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்  தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, 

தொண்டர்களின் இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். யாரும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினார் ஜெயலலிதா. சென்னை ஐகோர்ட் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்புக்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம். தொண்டர்கள் விரும்பியது நடந்திருக்கிறது. தீர்ப்பை ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம்.

அ.தி.மு.க.வை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் நடக்காது. அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்ற பாகுபாடு இல்லை. அ.தி.மு.க. ஒரே இயக்கம்தான். விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு. எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும்.

ஜூன் 23-ம் தேதிக்கு முன் யாரெல்லாம் கட்சியில் இருந்தார்களோ அவர்கள் தொடர்ந்து கட்சியில் இருப்பார்கள். அ.தி.மு.க.வின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து