முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை தேர்த் திருவிழா தொடங்கியது: வரும் 3-ம் தேதி தேரோட்டம்

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2023      ஆன்மிகம்
Srirangam- 2023 01 26

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 3-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத் தேர் திருவிழாவிற்கு கடந்த 24-ம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து தைத்தேர் கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. இதையடுத்து நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையடுத்து 2-ம் நாளான இன்று (27-ம் தேதி) நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனம், மாலையில் ஹம்ச வாகனத்தில் காட்சி அளிக்கிறார். தொடர்ந்து 3-ம் நாளில் சிம்ம வாகனம், மாலையில் யாளி வாகனம், 4-ம் நாளில் இரட்டைபிரபை வாகனம், மாலையில் கருட வாகனம், 5-ம் நாளில் சேஷ வாகனம், மாலையில் ஹனுமந்த வாகனம், 6-ம் நாளில் கற்பக விருட்சம் வாகனம், மாலையில் யானை வாகனம், 7-ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8-ம் நாள் நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளுகிறார்.

முக்கிய நிகழ்ச்சியான தை திருவிழா தேரோட்டம் பிப்ரவரி 3-ம் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது. விழாவின் 10-ம் நாளில் சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து நிறைவு நாளான வருகிற 5-ம் தேதி நம்பெருமாள், ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள் திருவீதி வலம் வருகிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து