முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை அருகே மிளகாய் பொடி தூவி நகை வியாபாரியிடம் ரூ.1.5 கோடி கொள்ளை

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      தமிழகம்
Rupees 2000

Source: provided

நெல்லை : நெல்லை அருகே நகை வியாபாரியிடம் மிளகாய் பொடி தூவி ரூ 1.5 கோடி கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (40). இவர் நெல்லையில் நகைக் கடை மற்றும் விற்பனை பொருள்களை கொண்டு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம்  நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் 2 உதவியாளர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது, நெல்லையிலிருந்து இவரது காரை தொடர்ந்து முன்னும் பின்னும் இரண்டு கார்கள்  வந்துள்ளன. நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் வரும் போது திடீரென இரு கார்களிலும் வந்த முகமூடி கும்பல் சுஷாந்தின் காரை வழி மறித்து  நிறுத்தி அவர் மீது மிளகாய் பொடி தூவி கம்பியால் தாக்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த 1.5 கோடி ரூபாயை திருட முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த தனியார் ஆம்னி பேருந்தின்  ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மற்றும் பயணிகள் சேர்ந்து கொள்ளையர்களை விரட்டி உள்ளனர்.  இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் சுஷாந்தை தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டு அவரது காரையும் கடத்தி சென்று விட்டனர். 

சிறிது தொலைவு வந்ததும் சுஷாந்தை நடுவழியில் இறக்கி விட்ட அந்த கும்பல், நாகர்கோவில் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளது.  தொடர்ந்து சென்றால் நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள் சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தை நோக்கி கடத்தல் கும்பல் காருடன் சென்றுள்ளது.

அங்குள்ள குளத்தின் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த பண கட்டுகளை தங்கள் காருக்கு மாற்றிய கொள்ளை கும்பல் சுஷாந்தின் காரை அங்கே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.  இது குறித்து அப்பகுதி மக்கள் நாங்குநேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடைய கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த சுஷாந்த்  நெல்லையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்த பின் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாங்குநேரி காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் மூன்றடைப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சுஷாந்திடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவிப்பதால் அது ஒருவேளை கருப்பு பணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள  தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து