முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூர்யகுமார் யாதவ் சாதனை

வெள்ளிக்கிழமை, 2 மே 2025      விளையாட்டு
Suryakumar 2024-06-21

Source: provided

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில்  நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. இதில்  மும்பை இந்தியன்ஸ் அணி  வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

 

நடப்பு தொடரில் களம் இறங்கிய 11 ஆட்டங்களிலும் சூர்யகுமார் யாதவ் 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் தொடர்ந்து 11 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் ராபின் உத்தப்பா கொல்கத்தா அணிக்காக 10 ஆட்டங்களில் தொடர்ந்து 25 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. மேலும் இந்த ஐ.பி.எல்.-ல் சூர்யகுமாரின் ரன் எண்ணிக்கை 467-ஆக உயர்ந்தது. இதையடுத்து அதிக ரன் குவிப்புக்காக வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை குஜராத்தின் சாய் சுதர்சனிடம் (456 ரன்) இருந்து தட்டிப்பறித்தார்.

____________________________________________________________________________________________________________

சாய் சுதர்சனுக்கு பாராட்டு

இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. அடுத்ததாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 தரவரிசைக்கான போட்டிகள் ஜுன் மாதம் முதல் தொடங்க விருக்கின்றன. இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

ஐ.பி.எல். தொடரில் அற்புதமாக விளையாடிவரும் சாய் சுதர்சனை இந்தத் தொடரில் தேர்வு செய்ய வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இளைஞர் சாய் சுதர்சனை நான் அனைத்து வடிவிலான (டி20, ஒருநாள், டெஸ்ட்) ஆட்டத்துக்கும் ஏற்றவராகப் பார்க்கிறேன். அவர் மிகவும் கிளாஸான வீரராக இருப்பதால் எனது கவனம் அவர் மீதே இருக்கிறது.  ஷ்ரேயாஸ் ஐயர் கம்பேக் தரலாம். ஆனால், அதுவும் போட்டி நிறைந்ததாக இருக்கும். வெள்ளைப் பந்தில் கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்ற வீரர்களையும் பார்க்க வேண்டும் என்றார்.

____________________________________________________________________________________________________________

சர்ச்சையான அம்பயர் தீர்ப்பு

 ஐ.பி.எல். போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி கண்டது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 7 ரன்களில் இருக்கும்போது பசல்ஹக் பரூக்கி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. 15 நொடிகள் நேரத்துக்குப் பிறகு ரோஹித் சர்மா டிஆர்எஸ் ரிவிவ் எடுத்ததால் அதை நடுவர் ஏற்றுக்கொண்டு மூன்றாம் நடுவரிடம் சென்றார்.

பிறகு ரோஹித் சர்மாவுக்கு நாட் அவுட் என தீர்ப்பு கிடைத்தது. பிறகு ரோஹித் சர்மா 53 ரன்களை குவித்தார். இது போட்டியில் முக்கியமானதாக மாறியது. இது குறித்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் காலதாமதமானப் பிறகு எப்படி நடுவர் ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே, இந்த சீசனில் ஒருமுறை பந்துவீச்சாளர் (தீபக் சஹார்) விக்கெட் கேட்காதபோதே நடுவர் கையை உயர்த்தியது சர்ச்சையானது. ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது பொதுவாகவே நடுவர்கள் சாதகமாக இருப்பதாகப் பலமுறை குற்றச்சாட்டுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________________________________

ஐ.பி.எல்.: சந்தீப் சர்மா விலகல்

மும்பைக்கு எதிரான போட்டியில் களம்காணாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா தனது விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார். நடப்பு சீசனில் சந்தீப் சர்மா 10 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த சீசனில் சிறப்பான பந்துவீச்சாக 2 விக்கெட்டுகள் 21 ரன்களை கொடுத்திருந்தார்.

ராஜஸ்தான் அணி இந்த சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியதும் கவனிக்கத்தக்கது. மிகவும் அனுபவமிக்க சிறந்த டெத் ஓவர் பந்துவீச்சாளரான இவருக்கு மாற்றாக யாரைத் தேர்ந்தெடுப்பார்கள் என இதுவரை ராஜஸ்தான் நிர்வாகம் அறிவிக்கவில்லை.

____________________________________________________________________________________________________________

வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா

ஐ.பி.எல். போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி கண்டது. இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் மும்பை இந்தியனஸ் அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்த வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:  நாங்கள் மிகவும் தன்னடக்கமாகவும் ஒழுக்கமாகவும் போட்டியில் முழு கவனமாகவும் இருக்க விரும்புகிறேன். நாங்கள் கூடுதலாக 15 ரன்களை பெற்றிருக்கலாம். நானும் சூர்யாவும் பேசிக்கொண்டது என்னெவென்றால் குறைவான ரிஸ்க் உள்ள ஷாட்டுகளை ஆட வேண்டுமென்பதே. ஒவ்வொரு ஷாட்டுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமென நாங்கள் பேசிக்கொண்டோம். ரோஹித் சர்மாவும் ரியான் ரிக்கல்ட்டும் அதேமாதிரிதான் விளையாடினார்கள். இது முற்றிலும் சிறப்பானது. வீரர்கள் மீண்டும் தங்களது பேட்ஸ்மேன்ஷிப்புக்கு (திறமை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆடுவது) திரும்புகிறார்கள். அணியாக நாங்கள் சரியான பேட்மேன்ஷிப்பில் விளையாடுகிறோம் என்றார்.

____________________________________________________________________________________________________________

'செஸ்' குறித்து கபில் தேவ்

செஸ் விளையாட்டு வெறும் பொழுதுபோக்கு கிடையாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ஸ்கில்ஹப் ஆன்லைன் விளையாட்டுகள் கூட்டமைப்பின் விளம்பர தூதரான கபில் தேவ் செஸ் விளையாட்டு குறித்து பேசியதாவது: செஸ் போன்ற விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு மட்டும் கிடையாது. அவை அறிவாற்றலையும், நினைவாற்றலையும் மேம்படுத்துபவை. இதுபோன்ற விளையாட்டுகள் மன அழுத்தத்தை குறைக்கும் என்றார்.

மற்றொரு விளம்பர தூதரான இரண்டு முறை உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கொனேரு ஹம்பி பேசியதாவது: விளையாட்டுத் துறையில் நாம் பொற்காலத்தை நம் கண் முன்னால் பார்த்து வருகிறோம். உலக செஸ் சாம்பியன் குகேஷ் மற்றும் டாப் 10 வரிசையில் இந்திய வீரர், வீராங்கனைகள் உள்ளனர். இந்தியாவில் செஸ் விளையாட்டின் எதிர்காலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரகாசமாக உள்ளது என்றார்.

____________________________________________________________________________________________________________

சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்

 நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது.  இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ், டக் அவுட்டில் வெளியேறினார். 14 வயது ஆன வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளின் சதம் விளாசி உலக அளவில் பிரபலமானார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனால் வைபோவை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில்  இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்  கூறியதாவது:- வைபவ் ஏலத்திற்குள் நுழைந்த போது அவர் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். அதே சமயம் வைபோவை தேவையில்லாமல் ஒரே நாளில் தூக்கி ரொம்ப கொண்டாடக்கூடாது. மேலும் அவர் இளம் வயது என்பதால் தன்னுடைய விளையாட்டை மென்மேலும் அவர் வளர்த்துக் கொள்வார் என்று நினைக்கின்றேன். அதுவும் இல்லாமல் ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவானுடன் அமர்ந்து இன்னிங்சை எப்படி கட்டமைப்பது என்பதை அவர் கற்றுக் கொள்வார். அதிரடி வீரர் என்ற பெயரை வாங்கி விட்டதால், தொடர்ந்து அனைத்துப் போட்டிகளிலும் அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கக் கூடாது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து