முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி. பங்கு விற்பனை: ஊழியர்கள் உண்ணாவிரதம்

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2013      வர்த்தகம்
Image Unavailable

 

நெய்வேலி, ஜூலை. 3 - என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக என்.எல்.சி. ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

அதற்கு முன்னதாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது என்று முடிவெடுத்திருந்தனர். அதன்படி கடந்த 26 ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நேற்று அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தெர்மல் பஸ் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். 

உண்ணாவிரதத்தையொட்டிபஸ் நிலைய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று இரவு 10 மணி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி.யில் 16 தொழிற்சங்கங்கள், 3 என்ஜீனியர் சங்கங்கள், 2 நலச்சங்கங்கள், ஒரு அதிகாரி சங்கம் ஆகிய 22 சங்கங்கள் உள்ளன. அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. 13 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். 

என்.எல்.சி.யில் 3 அனல் மின் நிலையங்கள், 3 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அனல் மின் நிலையங்கள் 2,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. சராசரியாக தினமும் 2 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படும். எனவே 4 ம் தேதி முதல் படிப்படியாக ஒட்டுமொத்த மின்சாரமும் உற்பத்தியின்றி போய்விடும். தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. அதுவும் நின்று விடும். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 60 சதவீதம் தமிழ்நாட்டுக்கும், மீதியுள்ள மின்சாரம் கேரள, கர்நாடக, புதுச்சேரி மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. நெய்வேலி மின்சாரம் தடைபடுவதால் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. என்.எல்.சி. ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 4 ம் தேதி நெய்வேலியில் கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே நெய்வேலி முழுவதும் கடைகள் அடைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்