முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்த ஊர் திரும்பிய அன்னா ஹசாரேவுக்கு உற்சாக வரவேற்பு

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

ராலிகான்சித்தி, செப்.- 2 - ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று சொந்த ஊர் திரும்பினார்.  அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊழலுக்கு எதிராக கடுமையான லோக்பால் மசோதாவைக் கொண்டுவர வேண்டும் என்று டெல்லி ராம்லீலா மைதானத்தில்  உண்ணாவிரதம் இருந்த சமூக சேவகர் அன்னா ஹசாரே தனது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார். உண்ணாவிரதத்தை முடித்த ஹசாரே அரியானா மாநிலம் குர்காவூன் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அன்னா ஹசாரே நேற்று மகாராஷ்ட்ர மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான ராலிகான்சித்திக்கு கார் மூலம் வந்து சேர்ந்தார். அப்போது திரளாக கூடியிருந்த அவரது சொந்த கிராமத்து மக்கள் பட்டாசுகளை வெடித்து அன்னாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஒரு ஹீரோவுக்கு கொடுப்பதைப் போல அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை நேரத்தில் ஹசாரே சொந்த கிராமத்திற்கு வந்ததை அறிந்த கிராம மக்கள் பெருந்திரளாக கூடி வாழ்த்து கோஷங்களை முழக்கியதுடன் தங்களது பாராட்டுக்களையும் அவருக்கு தெரிவித்தனர். நேற்று காலை தனது கிராமத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் சொந்த கிராம மக்களுடன் ஹசாரேவும் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டார். பிறகு தனது கிராமத்தில் ஓய்வெடுத்த அன்னா ஹசாரே, இன்று தனது கிராம மக்கள் கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்