முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன.1 - தமிழக முதல்வர் ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுப்பொலிவுடன் புத்தாண்டு புலர்கின்ற இந்த இனிய நன்னாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்ற உன்னத, உயரிய லட்சியத்தை அடைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உங்கள் சகோதரியின் தலைமையிலான தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வரும் வேளை இது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட, தமிழகத்தில் புதிய சாதனைப் பூக்கள் குலுங்கி எங்கும் மணம் பரப்பிட உளப்பூர்வமாக உழைக்கின்ற தருணம் இது.

சீர்மிகு திட்டங்கள் ஏற்றம் பெறவும், ஏழ்மை நிலை அகன்றிடவும் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை உரியவர் அனைவருக்கும் பெற்றிட வேண்டும் என்பதே இந்த இனிய புத்தாண்டில் எனது பேரவா.

ஒன்றுபட்டு நிற்போம் ! ஓயாது உழைப்போம் ! எந்த நிலையிலும், எந்த வகையிலும், தமிழ்நாட்டின் உரிமைகளை ஒரு போதும் விட்டுத் தர மாட்டோம் ! உறுதி கொண்ட உள்ளத்துடன் பொற்காலத் தமிழகத்தை புதிதாய் மீண்டும் படைப்போம் !

இந்த இனிய புத்தாண்டில் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்த்திட என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்ளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்