முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐந்தே மாதத்தில் இரட்டிபாக மாறியது: மோடி மீண்டும் பிரதமராக 52 சதவீதம் மக்கள் ஆதரவு: கருத்துக்கணிப்பில் தகவல்

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 52 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 24 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அது இரட்டிப்பாக மாறியுள்ளது. பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்தி செல்ல தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு 17 சதவீதம் பேர் மம்தா பானர்ஜியை சுட்டிக்காட்டியுள்ளனர்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் நாட்டு மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய ‘இந்தியா டுடே’ நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பு தகவல்கள் நேற்று காலை வெளியிடப்பட்டுள்ளன.

அதில் பிரதமர் மோடி தொடர்ந்து மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்வது தெரிய வந்துள்ளது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முதல்வர்களின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே சமயத்தில் எதிர்க்கட்சி முதல்வர்களின் செல்வாக்கு அதிகரித்து இருப்பது கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. 

கருத்துக்கணிப்பு முழு விவரம் வருமாறு:-

1) சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் 58 சதவீதம் பேர் ஆட்சியாளர்கள் மீது திருப்தி தெரிவித்துள்ளனர். 63 சதவீதம் பேர் மோடி அரசு சிறப்பாக இருப்பதாக கூறி உள்ளனர். (2020-ம் ஆண்டு நடந்த கருத்துக்கணிப்பில் 78 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்).

2) சட்டசபை தேர்தல் நடக்கும் உத்தரபிரதேசத்தில் மோடிக்கு 75 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவாவில் 67 சதவீதம் பேர், மணிப்பூரில் 63 சதவீதம், உத்தரகாண்டில் 59 சதவீதம், பஞ்சாபில் 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

3) மாநில முதல்வர்களில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 71 சதவீதம் பேரின் ஆதரவை பெற்றுள்ளார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 69.9 சதவீதமும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 67.5 சதவீதமும், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே 61.8 சதவீதமும் ஆதரவு பெற்றுள்ளனர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு 61.1 சதவீதமும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 57 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.

4) பா.ஜ.க. ஆளும் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, பீகார் மாநிலங்களில் அந்த மாநில முதல்வர்களுக்கு 35 முதல் 40 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. கோவா பா.ஜ.க. முதல்வர் பிரமோத்துக்கு 27 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

5) மாநில முதல்வர்களை ஆதரிக்கும் வி‌ஷயத்தில் மக்கள் மனநிலையில் மாற்றங்கள் இருந்தாலும் தேசிய அளவில் பிரதமர் மோடி அதிக செல்வாக்குடன் முதல் இடத்தில் இருக்கிறார். இதன் காரணமாக இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜனதாவுக்கு 296 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. (இது 2019 தேர்தலில் பா.ஜ.க. பெற்ற 352 இடங்களில் 56 இடங்கள் குறைவாகும்). அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 10 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

6) மோடிக்கு ஆதரவு இருந்தாலும் மக்கள் சில வி‌ஷயங்களில் கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. விலைவாசி உயர்வு அதிகமாகி விட்டதாக 25 சதவீதம் பேர் சொல்லி இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இருப்பதாக 13.6 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

7) விவசாயிகள் பிரச்சினை சரியானபடி கையாளப்படவில்லை என்று 10 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதுபோல கொரோனா நோய் எதிர்கொள்ளும் வி‌ஷயத்திலும் 7 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

8) நாட்டு மக்களில் 64 சதவீதம் பேர் தங்களது பொருளாதார நிலை சரியாக இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர். பெரிய தொழில் அதிபர்கள் மோடி ஆட்சியில் லாபம் அடைந்திருப்பதாக 47.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

9) பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட அடுத்த தகுதியான நபர் யார் என்ற கேள்விக்கு மோடிக்கு 52.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் அவருக்கு நாடு முழுவதும் 24 சதவீதம் பேர் ஆதரவுதான் இருந்தது. அது இரட்டிப்பாக மாறி இருக்கிறது.

10) காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 சதவீதமாக இருந்த அவரது செல்வாக்கு தற்போதைய கருத்துக்கணிப்பில் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது.

11) பிரதமர் பதவிக்கு பிரியங்கா பொருத்தமானவர் என்று வெறும் 3.3 சதவீதம் பேர்தான் கருத்து தெரிவித்துள்ளனர். மம்தாவுக்கு 2.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

12) பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்தி செல்ல தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு 17 சதவீதம் பேர் மம்தா பானர்ஜியை சுட்டிக்காட்டியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 16 சதவீதமும், ராகுல் காந்திக்கு 11 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது. சோனியா, சரத்பவார், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்கு குறைந்த அளவு ஆதரவே கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து