முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிவாளன் விடுதலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது மத்திய அரசு : விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 13 மே 2022      இந்தியா
Peraivalan 2022 05 13

Source: provided

புதுடெல்லி : பேரறிவாளன் விடுதலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று எழுத்துப்பூர்வமான வாதங்களை மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 3 நாட்களுக்கு முன் இறுதிக்கட்ட வாதம் நடைபெற்றது.  

அப்போது அரசியலமைப்பில் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு வாதிட்டது. மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டுமே முடிவெடுக்கலாம் என்றும், பேராறிவாளனின் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பின் கீழ் வருவதால் மாநில அரசு முடிவெடுக்க முடியாது என்றும் கூறியது.

கவர்னர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் குடியரசுத் தலைவரை தலையிட வைப்பது ஏன்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக கவர்னர் செயல்பட்டிருப்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணானது என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து கவர்னரின் அதிகாரம், மத்திய அரசின் அணுகுமுறை குறித்து நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.  மேலும், இந்த வழக்கில் மேற்கொண்டு ஏதேனும் வாதங்கள் இருந்தால் அதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறி்ப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், பேரறிவாளன் மற்றும் மத்திய அரசு சார்பில் நேற்று எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து இந்த வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டே தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து