முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கனஅடி நீர் திறப்பு : கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கியில் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 9 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Mettur dam 2022-08-02

Source: provided

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு  ஒரு லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

காவிரி கரையோர பகுதிகளான முதலை பண்ணை, ஆலம்பாடி, சத்திரம் மற்றும் பிரதான அருவி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்தது.

மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக ஒரு லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடியும் என மொத்தம் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. 

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 120.05 அடியாக இருந்தது.  மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. ஏற்கனவே வெள்ளம் சற்று குறைந்த நிலையில் பள்ளிபாளையம், குமாரபாளையம், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கரையோர மக்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பினர்.

தற்போது மறுபடியும் வெள்ளம் அதிகமானதால் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரியில் புரண்டோடும் வெள்ள நீரில் குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் அருகில் சென்று செல்பி எடுக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு தறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒலி பெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து