முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது: குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Rain 20221 02 02

Source: provided

சென்னை: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில்

கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

வங்கக்கடலில் கடந்த 28-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும், அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென், வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று முன்தினம் இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் 2 தினங்களுக்கு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (2.02.2023) அதிகாலை இலங்கை-திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று (3.03.2023) நிலவக்கூடும்.

இதன் காரணமாக (03.02.2023) இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

(04.02.2023) அன்று தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். (05.02.2023) மற்றும் (06.02.2023) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து