முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிப்பு விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
Railway 2023-05-25

Source: provided

சென்னை: தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரையிலிருந்து நாகா்கோவிலுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான பணி நிறைவடைந்துள்ளது. 

மேலும், வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி வரையும், திருநெல்வேலி முதல் நாகா்கோவில் வரையும் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தென்மாவட்டங்களில் இரட்டை ரயில்பாதை பணி நிறைவு பெறவுள்ள நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது கோவை-நாகா்கோவில் விரைவு ரயில், சென்னை எழும்பூா்-கன்னியாகுமரி விரைவு ரயில்கள் முன்பை விட முன்னதாக வந்து சேருகின்றன. 

இந்தப் பகுதியில் பணி நிறைவடையும் நிலையில் அனைத்து ரயில்களும் முன்பை விட 10 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்.  மேலும், செங்கோட்டை-நெல்லை வழித் தடத்தில் இயக்கப்படும் ரயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுகிறது. ரயில்களின் வேக அதிகரிப்பு பற்றி விரைவில் அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து