முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரை சந்தித் சூர்யவன்ஷி

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      விளையாட்டு
Suryavanshi 2025-04-29

Source: provided

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த சீசனில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பிகார் முதல்வர், கூகுள் சிஇஒ உள்பட பலரும் இந்தச் சிறுவனுக்கு வாழ்த்து மழை பொழிந்தார்கள். 7 போட்டிகளில் விளையாடிய சூர்யவன்ஷி 252 ரன்களை அடித்தார். இதில் ஒரு சதம், அரைசதம் அடங்கும். குறிப்பாக 206.55 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தனது குடும்பத்துடன் சூர்யவன்ஷி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: பாட்னா விமான நிலையத்தில் இளம் கிரிக்கெட்டர் வைபவ் சூர்யான்ஷியையும் அவரது குடும்பத்தையும் சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் இந்தியா முழுவதும் பாராட்டப்படுகிறது. அவரது வருங்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் இந்தச் செயலுக்கு பலரும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

____________________________________________________________________________

குல்வீர் சிங்குக்கு 2-வது தங்கம்

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில்  31-ந் தேதி வரை நடக்கிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியும் அடங்கும்.

இந்நிலையில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குல்வீர் சிங் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 13:24.78 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

____________________________________________________________________________

இங்கிலாந்து சாதனை வெற்றி

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி எட்ஜ்பேஸ்டானில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 400/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 82 ரன்கள் குவித்தார். 

அடுத்து விளையாடிய மே.இ.தீ. அணி 26.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் சாய் ஹோப் 25, ஜெய்டன் சியல்ஸ் 29 ரன்கள் அடித்தார்கள். இங்கிலாந்து சார்பில் சகீப் முகமது, ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். 238 ரன்கள் வித்தியாசத்தில் ஹாரி புரூக்கின் தலைமையில் முதல் வெற்றியை இங்கிலாந்து அணி பெற்றுள்ளது. 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முதல்முறையாக ஒருநாள் போட்டிகளில் முதல் 7 பேட்டர்களும் 35-க்கும் அதிகமான ரன்களை குவித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.

____________________________________________________________________________

மழை குறுக்கிட்டால் என்னாகும்?

ஐ.பி.எல். பிளே-ஆஃப்ஸ் போட்டிகள் தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற குவாலிஃபயர் 1-இல் ஆர்.சி.பி. வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பஞ்சாபின் முல்லான்பூரில்  2வது எலிமினேட்டரில் மும்பை இந்தியன்ஸும் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன. 5 முறை கோப்பை வென்ற மும்பையும் ஒருமுறை கோப்பை வென்ற குஜராத்தும் சமபலத்துடன் இருக்கின்றன.

முல்லான்பூரில்  போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லை என அமெரிக்க வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை மழைப் பொழிந்தால், அது மும்பைக்கு பாதகமாக அமையும். ஏனெனில் போட்டி ரத்தாகினால் ரிசர்வ் டே இல்லாததால் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் 3-ஆம் இடத்தில் இருக்கும் குஜராத் வென்றதாக அறிவிக்கப்படும். மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மழை வராமல் இருக்க சமூக வலைதளங்களில் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

____________________________________________________________________________

காலிறுதியில் இந்திய ஜோடி

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை இந்தோனேசியாவின் சபார் கரியமான் குடாமா-முகமது ரீஜா ஜோடி உடன் மோதியது.

இதில் முதல் செட்டை இழந்த இந்திய ஜோடி சரிவில் இருந்து மீண்டு அடுத்த 2 செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 19-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 1 மணி 14 நிமிடம் நீடித்தது. இந்திய இணை காலிறுதியில் மலேசியாவின் கோக் செ பெய் - நூர் இஸ்லாதீன் ஜோடியுடன் மோத உள்ளது.

____________________________________________________________________________

குகேஷ் 2-வது வெற்றி

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதில் தனது முதல் 2 சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்த குகேஷ் 3-வது சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை தோற்கடித்து வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.

இதனையடுத்து குகேஷ் 4-வது சுற்றில் அமெரிக்க கிராண்ட்மாஸ்டரான பாபியானோ கருனா உடன் மோதினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் குகேஷ் விளையாடினார். இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் ஆட்டம் டிரா ஆனது. அதன் பிறகு வெற்றியாளரை தீர்மானிக்க அர்மகெதோன் டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் குகேஷ் வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம் குகேஷ் தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

____________________________________________________________________________

ஐ.பி.எல்.: ஹேசில்வுட் புகழாரம்

ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ஜோஸ் ஹேசில்வுட், தோள்பட்டை  காயத்திலிருந்து மீண்டு  சண்டீகரில் நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி, பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவினார். 3.1 ஓவர்கள் வீசிய ஹேசில்வுட், 21 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள நிலையில்,  இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான்  உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராவதற்கு ஐ.பி.எல். தொடரைவிட சிறந்த இடம் வேறு இல்லை என நினைக்கிறேன். இங்கு அதிக நேரம் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடுகிறேன். போட்டியில் இருக்கும் தீவிரத்தன்மை என்னை நன்றாக தயார்படுத்திக் கொள்ள உதவுகிறது. என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து