முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 29 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 30 - மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலை வரும் 11 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை 5 கட்டங்களாக நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இத்தேர்தலை மூன்று கட்டங்களாக வரும் 2 ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதல் படைகளை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பட்நாயக், ரஞ்சன் கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் சராசரியாக 35 ஆயிரம் பாதுகாப்பு படையினரை மாநில அரசு பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் போதுமான பாதுகாப்பு படையினரை மத்திய அரசும் அளிக்க வேண்டும். தேர்தல் நடைபெறும் தேதியையும் மாற்றி அமைக்கிறோம். அதன்படி ஜூலை 11, 15, 19, 22, 25 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தலை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். 

முன்னதாக இப்போதைய சூழ்நிலையில் தாங்கள் கோரும் அளவுக்கு பாதுகாப்பு படையினர் இல்லாமல் மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படையினரின் தேவையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி மேற்கு வங்க மாநில, மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டிருந்தது. 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ரம்ஜான் மாதத்தில் தேர்தலை நடத்தினால் அது சிறுபான்மையின மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால் அப்போது தேர்தல் நடத்த வேண்டாம் என்று எண்ணியிருந்தோம். எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்று மம்தா கூறியுள்ளார். இதனிடையே மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையர் மீரா மாண்டேவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த மே மாதம் மாநில அரசுடன் தேர்தல் ஆணையத்துக்கு மோதல் போக்கு ஏற்பட்ட போது மீரா பாண்டேவுக்கு மிரட்டல் கடிதம் வந்தது குறிப்பிடத்தக்கது. 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்கு இருந்து வருகிறது. மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. ஆனால் இதை மம்தா பானர்ஜி ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டில் மாநில அரசு மனு தாக்கல் செய்தது. 

தேர்தல் ஆணையத்துடன் கலந்து பேசி மத்திய படையின் பாதுகாப்புடன்தான் தேர்தலை நடத்த வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய படை பாதுகாப்பை மம்தா கோரினார். ஆனால் உத்தரகாண்டில் மீட்பு பணியில் இருப்பதால் போதிய வீரர்களை அனுப்ப முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் முன்னதாக தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்