முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக செயற்குழு கூடியது

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.31 - சென்னையில் நேற்று ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நேற்று சென்னையை அடுத்த வானகரம் பகுதியில் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றது.  நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்கு பிறகு முதன் முதலாக செயற்குழு மற்றும் பொதுக் குழு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தானே புயலின் பாதிப்பால் கடந்த 2 நாட்களாக சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க.பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பிற்பகல் 1.30 மணியளவில் பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்திற்கு வந்தார். முதலில் செயற்க்குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் பொதுக்குழு கூடியது.  பொதுக்குழு கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். பொதுக்குழு மேடையில் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர்கள் செங்கோட்டையன், சி.பொன்னையன், செம்மலை, பி.எச்.பாண்டியன், விசாலாட்சி நெடுஞ்செழியன், வளர்மதி, பொன்னையன், வேணுகோபால் எம்.பி, அன்வர் ராஜா  ஆகியோர் பொதுக்குழு மேடையில் இருந்தனர்.  

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நகர ஒன்றிய செயலாளர்கள் மற்றும் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், மண்டல குழு தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி கோருதல், தமிழக உரிமையை நிலைநாட்டுவது,  தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த 6 மாதங்களாக அரசு நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்களை சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்தும், அ.தி.மு.க. கட்சியை உறுதியாக கட்டமைக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு உரிய அதிகாரங்களை அளிக்கும் சிறப்புத் தீர்மானம் உட்பட 25 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க.  பொதுக்குழு உறுப்பினர்கள் 2 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர். பொதுக்குழுவையொட்டி கொட்டும் கனமழையில் ஜெயலலிதாவுக்கு வழிநெடுகிலும், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் குதிரைப்படை, கரக்காட்டம் மற்றும் மகளிர் அணி சார்பாகவும் ஜெயலலிதா உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்