முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்தது : விவசாயிகள் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      தமிழகம்
KRP-dam 2023-10-11

Source: provided

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 10 நாளில் 6 அடி உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களாக, கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி.அணை, ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை, ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை மற்றும் சின்னாறு அணை, பாரூர் பெரிய ஏரி ஆகியவை உள்ளது. 

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து,  தங்களது நிலத்தை சீர்செய்து பயிரிட்டனர். இதற்கிடையே, கடந்த 3 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் இல்லாமல், பயிர்கள் காய்ந்தன.   

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரி அணைக்கு சுமார் 45 நாட்கள் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றிருந்த நிலையில், கோடை மழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. 

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் மொத்த உயரமான 52 அடியில், கடந்த 14-ம் தேதி 38.40 அடி தண்ணீர் இருந்தது. அன்று இரவு பெய்த கனமழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 1126 அடியாக இருந்தது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கடந்த 10 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 6.05 அடி உயர்ந்து, தற்போது அணையின் மொத்த உயரமான 52 அடியில் 44.45 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அணையின் நீரை நம்பி, கிருஷ்ணகிரி தாலுகாவிற்கு உட்பட்ட  14 ஊராட்சிகளில் உள்ள 9 ஆயிரத்து 12 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கு தண்ணீர் வருவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து