முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினவிழா

செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2017      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினவிழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது.
அழகப்பாபல்கலைக் கழகத் துணை வேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று உரையாற்றுகையில், ஒருவருடைய பெருமையை அவருடைய ஆசிரியரையும், மாணவரையும் அறிந்து கொள்வதன் மூலம் மதிப்பிடலாம்.  ஒவ்வொரு ஆசிரியரும் தாம் பணிபுரிகின்ற நிறுவனத்தை சிறப்படையச் செய்வதை நோக்கமாக கொண்டு பணியாற்ற வேண்டும்.  நிறுவனத்தின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை அன்போடு நடத்த வேண்டும்.  அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்களாகவும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.  எந்த ஒருநாடு ஆசிரியர்களை மதிப்புடன் நடத்துகிறதோ அந்த நாடு வளர்ச்சியடைந்திருக்கிறது.  ஆசிரியர்களை மதித்தவர்கள் எல்லாம் உயர்ந்திருக்கிறார்கள்.  கணினிமயமான இவ்வுலகத்தில் நிறைய கருத்துக்களை மாணவர்கள் தானாகவே தெரிந்து கொள்கிறார்கள்.  ஆதலால், அதையும் தாண்டி நிறைய கருத்துக்களை தெரிந்து கொண்டு, கற்பிப்பவர்களே சிறந்த ஆசிரியர்களாக மாணவர்களால் மதிக்கப்படுவார்கள்.
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி மேனாள் தமிழ்த்துறை தலைவர் பேரா. கண. சிற்சபேசன் தமது சிறப்புரையில், ஆசிரியர் என்பவர் குற்றம் அகற்றுபவர்.  எனவே, ஆசிரியர் குற்றம் இல்லாதவராக இருத்தல் வேண்டும். அவனவன் ஆற்றலை அவனவன் உணரவைப்பது தான் ஆசிரியரின் வேலை. ஆசிரியர்கள் கடுமையாக இருக்கலாம். ஆனால், கொடுமையாக இருக்கக் கூடாது. ஆசிரியர்களுக்குக் கற்றுக் கொள்ளும் திறன் வேண்டும். ஆசிரியர்களுக்குக் கருணையும், அறிவும் மிகவும் முக்கியமாகும். ஆசிரியர்கள் எப்பொழுதும் சிந்திக்க கூடியவர்;களாக இருக்கவேண்டும்.  ஆசிரியர்கள் நிறையப் படிக்கவேண்டும். அவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். எனவேதான் எழுத்தறிவித்தவன் இறைவன் என ஆசிரியர்கள் போற்றப்படுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், அழகப்பாபல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள்   முனைவர் ஏ. நூராயண மூர்த்தி,முனைவர் கே. குருநாதன், முனைவர் ஜெ. ஜெயகாந்தன், புலமுதன்மையர்கள் மற்றும் பேராசிரியர்கள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் அழகப்பா மாதிரிமேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் ஆசிரியர் தினவிழாநினைவுப் பரிசினை துணைவேந்தர் வழங்கிச் சிறப்பித்தார்.
முன்னதாக, அழகப்பாபல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். தேர்வாணையர் முனைவர் எச். குரமல்லே~; பிரபுநன்றி கூறினார். முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை மற்றும் திருமதி பி.சுந்தரவடிவு ஆகியோர் இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து