முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வாங்கலாம்: அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

ஊரடங்கையொட்டி மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6.00 மணி முதல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை  ஞாயிற்றுக்கிழமை (5.4.2020) முதல் குறைத்து, காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா தொற்று நோய் ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்ககூடியதென்றும்,  இதற்கு மதச்சாயம் பூசுவதை  அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கொரோனா பெருந்தொற்றினால்  நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த தொற்றுநோய் சமூகப் பரவலாக மாறுவதை தடுக்கும் பொருட்டு, சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறது.    இத்தருணத்தில் பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அரசின் முயற்சிகளோடு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.  எனவே, பல்வேறு சமய தலைவர்கள்  மற்றும் அவர்கள் சார்ந்த  இயக்கங்களின் ஒருமித்த ஆதரவினைக் கோர முடிவு செய்யப்பட்டு, எனது உத்தரவின்பேரில்  பல்வேறு  மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், சமய தலைவர்களுடனான கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  மாநில அளவிலும்  அரசு சார்பில் தலைமைச் செயலாளர் தலைமையில் 03.04.2020 அன்று  கிருத்துவ, இஸ்லாமிய, இந்து, ஜெயின் மற்றும் சீக்கிய மதத் தலைவர்களுடன் தனித்தனியே கூட்டம் நடத்தப்பட்டது. 

மக்களிடையே கொரோனா தொற்று நோயின் தீவிர பரவல் தன்மையையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறிப்பாக, பெரியோர்கள், நோயுற்றவர்கள், குழந்தைகள் போன்றவர்களிடையே ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் அரசு  எடுத்துவரும் முயற்சிகளான,  தனி மனித சுகாதாரம், தனிமை படுத்துதல், சமூக விலகல் போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்க  அரசோடு பல்வேறு சமுதாய தலைவர்களும், அவர்கள் சார்ந்த தன்னார்வர்களும்  இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உரிய ஒத்துழைப்பு வழங்க  இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், கொரோனா பெரும் தொற்று நோயினால் மனித சமுதாயத்திற்கு ஏற்படவுள்ள ஆபத்து பற்றியும் எடுத்துரைத்து இந்நோய் பரவுதை தடுக்க அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும், மனித சமுதாயமே தங்கள் வேறுபாடுகளை புறந்தள்ளி ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும், சமூக விலகல், தனிமை படுத்துதல் போன்ற முயற்சிகளுக்கு அந்தந்த சமுதாய தலைவர்கள் சமூக ஆர்வலர்களை திரட்டி அரசோடு ஒன்றிணைந்து நோய்பட்டவர்கள், அவர்தம் குடும்பங்கள் மற்றும் நோயுற்றவரோடு  தொடர்பு ஏற்பட்டவர்களை தனிமை படுத்த உதவினால் தான் இந்த நோயிலிருந்து அவர்களை மீட்டெடுக்கவும், இந்த நோய் சமூக பரவலாக மாறி மக்களிடையே பேரிழப்பை ஏற்படுத்துவதை தடுக்கவும் இயலும் என்றும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற எனது கோரிக்கை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி, கொரோனா தொற்றுநோய் தடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக பல்வேறு மதத் தலைவர்களும் தெரிவித்தனர். அவர்கள் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

நோய் தொற்று பொது மக்களுக்கு பரவுவதை தவிர்க்க, பொது மக்கள் எதிர்நோக்கும் பண்டிகைகள் காலத்தில், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  கொரோனா தொற்று நோய் ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்ககூடியதென்றும்,  இதற்கு மதச்சாயம் பூசுவதை  அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், நோய் தொற்றால்  பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மக்கள்  வெறுப்புணர்வுடன் பார்ப்பதை தவிர்த்து,   இதுபோன்ற தொற்று நோய் அனைவருக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து அத்தகையவர்களை அனைவரும் அன்போடும், பரிவோடும்  நடத்த வேண்டுமென்றும்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை என்று தெரிய வருவதால், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைத்து மருத்துவமனைகளையும் அழைத்து பேசி,  அவை திறப்பதற்கும் செயல்படுவதற்கும் தேவையான பணியாளர்களை அனுமதிக்க, உரிய  வாகன வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகள், நோய்தொற்று உள்ளவர்களை பாரபட்சமின்றி, பரிவோடும்  அன்போடும் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.   எனினும், சில நோய் தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், இதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது.

தொற்று நோய் உள்ளதா என கண்டறிந்து, சோதனைக்குப் பின்பு தொற்று நோய் அல்லாதவர்களை உடனுக்குடன் அவர்களது வீட்டுக்கோ அல்லது தனிமை படுத்தப்படும் மையங்களுக்கோ அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களையும், இத்தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பிலிருந்த நபர்களையும்  தனிமைப்படுத்தும்போது,  சமய தலைவர்கள் உதவியோடு அவர்களின்  வீடுகளிலோ அல்லது இதற்கான தெரிவு செய்யப்பட்ட இடங்களிலோ அரசின் கண்காணிப்பில் தனிமைபடுத்திக் கொள்ள,  உரிய வசதிகளை செய்து கொள்ளலாம் என்றும், அதற்கு  அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இதற்கென அந்தந்த பகுதியில் தனிமை படுத்தும் தன்னார்வ குழுக்கள் அரசுடன் இணைந்து பணி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு  மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க சமுதாய தலைவர்கள் முன்நின்று ஒத்துழைக்க வேண்டுமென்றும், இதற்காக மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அமைத்துள்ள மன நல மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் மூலம் ஸ்கைப் போன்ற  செயலிகளை பயன்படுத்தி தனிமையில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை வழங்க அரசோடு இணைந்து செயல்படலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை வீடுகளுக்கே சென்று வழங்க அரசு தரப்போடு இணைந்து சமூக ஆர்வலர்கள் செயல்படலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசு தயாரித்துள்ள பல்வேறு பிரச்சார பிரதிகள் மற்றும் கையேடுகளை சமய அமைப்புகளுக்கு வழங்கவும் அதை அவர்கள் பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மத தலைவர்களும்   கோரியபடி, அவர்களின் ஆளுகையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற  கட்டிடங்களை தனிமை படுத்தப்பட்டவர்களுக்காக உரிய வசதிகளை அமைத்து  பயன்படுத்திக் கொள்ள  உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த தகவலை சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு மத தலைவர்கள் கேட்டுக்கொண்டபடி, வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்களின் விவரங்கள்  அறிந்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கு அரசுடன் சேர்ந்து தன்னார்வ தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலை நேரங்களில் சந்தை பகுதிகளில் கூடுதல் கூட்டத்தை தவிர்க்கவும், கூடுதல் சமூக விலகலை கடைபிடிப்பதை உறுதி செய்யவும்,  தன் ஆர்வலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து மதத் தலைவர்களும், சமூக தொண்டர்களும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடனும், சென்னையில் மாநகராட்சி ஆணையருடனும் ஒருங்கிணைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    இது தவிர, மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6.00 மணி முதல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை  ஞாயிற்றுக்கிழமை (5.4.2020) முதல் குறைத்து, காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.  இதை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து