வெனிஸ் : அமெரிக்காவை தலைமையிடம் ஆக கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன்கள் பற்றிய விளம்பரமொன்றில் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கினாலும் அவை பாதிக்கப்படாது என தெரிவித்து இருந்தது.
ஆனால் இத்தாலி நாட்டின் ஏ.ஜி.சி.எம். என்ற ஒழுங்குமுறை ஆணையம் ஐபோன் பற்றிய தவறான விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது என கூறி அதற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்து உள்ளது.
நீரால் பாதிப்பு ஏற்படாது என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறும் விசயங்களில் வெளிப்படை தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 4 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கினால் பாதிப்பு இல்லை என நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் ஆய்வக பரிசோதனையில் தூய தண்ணீரில் மட்டுமே இது சாத்தியம் என்றும் கூறப்படுகிறது.
இதேபோன்று ஐபோன்கள் நீரால் பாதிக்கப்படாது என விளம்பரப்படுத்தி விட்டு, நீரால் பாதிப்பு ஏற்பட்டால் அது உத்தரவாதத்தின் ஒரு பகுதியில் வராது என கூறுவதும் மோசடியானது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
இதுபோன்று இத்தாலிய அமைப்பு அபராதம் விதிப்பது இது முதன்முறையல்ல. போனின் பேட்டரி பற்றிய தகவல்கள் உள்பட வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை பகிர்ந்து கொள்ளாதது போன்ற விசயங்களுக்காக கடந்த காலங்களிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.
எனினும் இந்த தொகை மிக குறைவானது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் அமெரிக்காவிலும் பேட்டரி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள ரூ.3 ஆயிரத்து 67 கோடி மதிப்பிலான தொகையை வழங்க அந்நிறுவனம் முன்வந்தது. அதன்பின்னர் ஆப்பிள் நிறுவனம் ரூ.830 கோடி தொகையை வழங்கி சமரசம் செய்து கொண்டது. இதனால் அத்துடன் அந்த விவகாரம் முற்று பெற்றது.