முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் : மத்திய சுகாதாரத்துறை தகவல்

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தடுப்பூசிகள் ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாகி வருகிறது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். தடுப்பூசி போடப்பட்டு வரும் சூழலிலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரிப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

தடுப்பூசிக்கான தேவை அதிகரித்திருப்பதை பயன்படுத்திக் கொண்ட சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு உயர்த்தியது. ரூ. 250-க்கு விற்கப்பட்டு வந்த தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு ரூ. 400-க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600-க்கும் விற்பனை செய்யப்படுமென சீரம் நிறுவனம் அறிவித்தது. 

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மாநில அரசுகள், தடுப்பூசி விலையேற்றத்தால் அதிருப்தி அடைந்தன. தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன.

இந்த நிலையில் மாநில அரசுகளின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசிகள் ரூ. 150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து