முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை கூட்டம் நேரடி ஒளிபரப்பா? கவர்னரை சந்தித்த பின் சபாநாயகர் அப்பாவு பேட்டி

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டசபையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி அன்று தொடங்குவதை அடுத்து, முதல் நாள் உரை நிகழ்த்தும் கவர்னரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து அழைப்பு விடுத்தார் சபாநாயகர் அப்பாவு.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக நடந்தது. மே 2-ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அமைச்சரவை மே 7-ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பொறுப்பேற்றது. 

16-வது சட்டசபையின் முதல்வராக ஸ்டாலினும், அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். சட்டசபை சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டார். துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வானார். அவை முன்னவராக துரைமுருகன் நியமிக்கப்பட்டார்.

16-வது சட்டசபையின் முறைப்படியான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளதாக அரசு அறிவித்தது. இந்தக் கூட்டம் முதல் நாள் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. 21-ம் தேதியன்று காலை கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகைக் கூட்டரங்கில் நடக்கிறது. முதல் நாள் கவர்னர் உரை நிகழ்த்துகிறார். 

கூட்டத்தொடர் தொடங்கும் முன், அலுவல் மரபுப்படி கவர்னரை சந்தித்து சட்டசபை சபாநாயகர் அழைப்பு விடுப்பது வழக்கம். அதன்படி சபாநாயகர் அப்பாவு நேற்று காலை கவர்னர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கவர்னருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

சட்டசபை கூட்டத்தொடர் வருகின்ற 21-ம் தேதி முதல் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. சட்டசபை தொடங்கும் முன் சபாநாயகர் கவர்னரை  சந்தித்து அழைப்பது வழக்கம். அதன்படி அவரைச் சந்தித்து அழைத்தேன். அவரும் மகிழ்வுடன் வருவதாக ஒப்புதல் அளித்தார்.

சட்டசபை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும். நீட் தேர்வு குறித்த பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்கும். விரைவில் நீட் தேர்வு குறித்து நல்ல முடிவு வரும். 

முதல் நாளே நாங்கள் சொல்லியிருக்கிறோம், முதல்வரும் சொல்லியிருக்கிறார். ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி நேரம் ஒதுக்கப்படும். முதல்வர் அறிவித்த 14 வகை பொருட்களை அனைத்துக் கட்சி சட்டமன்ற  உறுப்பினர்களும் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லி முதல்வர் கூறியுள்ளார். அதே ஜனநாயகம் சட்டசபையிலும் நடக்கும். எத்தனை நாட்கள் சட்டசபை நடக்கும் என்பது குறித்து சட்டசபை ஆய்வுக் குழு 21-ம் தேதியன்று கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.  இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து