முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலர்கள் சொந்த தேவைக்கு பஸ்களில் சென்றால் டிக்கெட் எடுக்க வேண்டும் : டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: சொந்த தேவைக்கு பஸ்களில் சென்றால் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியிலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசு பஸ்சில் சீருடை அணியாமல் பயணம் செய்த காவலர் டிக்கெட் எடுக்காமல் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் நடத்துனர் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடத்துனருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. சிகிச்சை பலனளிக்காமல் நடத்துனர் உயிரிழந்ததால் விவகாரம் பெரிதானது.

மனிதம் உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பொதுவாக காவலர்கள் அரசு பஸ்சில் பணி நிமித்தமாக பயணம் செய்யும் போது டிக்கெட்டுக்கு பதில் வாரண்ட் உள்ளது என்று சொன்னால் அதை நடத்துனர் கணக்கில் எடுத்துக்கொள்வார். பின்னர் காவல்துறைக்கு அனுப்பப்படும் மொத்த ரசீது மூலம் பணம் வசூலிக்கப்படும்.

இதில் போலீசார் சொந்த வேலையாக செல்லும் போதும், சீருடை அணியாமல் செல்லும் போதும் நடத்துனர்களிடம் போலீஸ் எனக் கூறுவார்கள். நடத்துனரும் கண்டு கொள்ள மாட்டார். அன்றும் அதுபோல் நடக்கும் என காவலர் நினைக்க வாக்குவாதம் முற்றியுள்ளது. வாரண்டும் இல்லாமல், சீருடையுடனும் இல்லாமல் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் பேருந்தின் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்ததே நடத்துனருக்கு மாரடைப்பு வரவும் உயிரிழக்கவும் காரணமாக அமைந்தது.

இதன் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அது காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. கடந்த மார்ச் மாதம் மனித உரிமை ஆணையம் அளித்த உத்தரவு அடிப்படையில் அரசு உத்தரவின்பேரில் உள்துறை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு அனைத்து பிரிவு காவலர்களுக்கும் பொதுவாக ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன்படி இனி வரும் காலங்களில் மேற்கண்ட மோதல் போக்குச் சம்பவம் போல் நிகழாமல் இருக்க அரசுப்பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் போலீசார் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல், உத்தரவை அனைத்து போலீசாரும் கடைபிடிப்பதை அந்தந்த துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து