முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரியில் 12-வது நாளாக தொடர்ந்த ஆட்கொல்லி புலியை தேடும் பணி

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

வனத்துறையினருக்கு உதவியாக கால்நடைகளை மேய்ப்பதில் அனுபவம் பெற்ற உள்ளூர் இளைஞர்கள் 10 பேரும் இணைந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் 4 பேரை அடித்து கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் கடந்த 10 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஆட்கொல்லி புலி வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் புதர்களுக்குள் பதுங்கி, பதுங்கி வனத்துறையினரிடம் இருந்து தப்பி வருகிறது. இதனால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.

இதற்கிடையே சிங்காரா வனப்பகுதியில் புலி சுற்றி திரிவதாக வந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சிங்காரா மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தக்கூடிய துப்பாக்கியுடன் கும்கி யானைகள் மீது அமர்ந்து வனத்திற்குள் சென்று புலியை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். கும்கி யானைகள் உதவியுடன் 4 மணி நேரம் தேடியும் புலியின் இருப்பிடம் தென்படவில்லை.

இந்த நிலையில் சிங்காரா வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள மூங்கில் புதரில் புலி பதுங்கி இருப்பதை வனத்துறையினர் அறிந்தனர். உடனடியாக வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் மூங்கில் புதரை சுற்றி வளைத்தனர். ஆனால் அதிகமான புதர் காரணமாக மயக்க ஊசி செலுத்த முடியவில்லை. ஆட்கள் நடமாட்டம் இருப்பதை அறிந்ததும் புலி வெளியில் வராமல், புதர்களுக்குள்ளேயே பதுங்கி, பதுங்கி தப்பியோடியது.

 

தொடர்ந்து நேற்று 12-வது நாளாக வனத்துறையினர், அதிரடிப்படையினர், கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி, துப்பாக்கியுடன் சிங்காரா வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். தற்போது புலி இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களுடன் கும்கி யானைகள், மோப்ப நாய்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. வனத்துறையினருக்கு உதவியாக கால்நடைகளை மேய்ப்பதில் அனுபவம் பெற்ற உள்ளூர் இளைஞர்கள் 10 பேரும் இணைந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து