முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஆண்டுக்கு பின் மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம்: வைகை ஆற்றில் 16-ம் தேதி கள்ளழகர் எழுந்தருள்கிறார்

சனிக்கிழமை, 26 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

மதுரை : கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி கோவில் வளாகத்திலேயே நடத்தப்பட்ட மதுரை சித்திரை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. வரும் 15-ம் தேதி எதிர்சேவையும், 16-ம் தேதி கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.  

மதுரையின் அடையாள மாக விளங்கும் சித்திரை திருவிழா  கொரோனா பரவல் கரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள்வளாகத்திலேயே பக்தர்களின்றி நடத்தப்பட்டது.  மதுரை நகரமே கோலாகலமாக கொண்டாடும் இந்த திருவிழா எளிமையாக நடந்தது  மக்களை ஏமாற்றமடைய செய்தது. 

தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திருவிழா வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. வரும் 5-ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கற்பக விருட்ச,சிம்ம வாகனத்தில் சுவாமி, மீனாட்சி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.  6-ம் தேதி புதன்கிழமை பூத , அன்ன வாகனத்திலும், 7-ம் தேதி கைலாச பர்வதம், காமதேனு வாகனத்திலும், 8-ம் தேதி வெள்ளிக்கிழமை தங்க பல்லக்கு வாகனத்திலும் தொடர்ந்து 11-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி, மீனாட்சி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். 

அதை தொடர்ந்து 12-ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேக நிகழ்ச்சியும், 13-ம் தேதி புதன்கிழமை மீனாட்சி திக்விஜயமும்,  14-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும், 15-ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. 17-ம் தேதி கள்ளழகர் வண்டியூர் தேனுர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருள்கிறார். பிற்பகலில் மண்டூக மகரிஷிக்கு  மோட்சம் தரும் கள்ளழகர்  இரவு தசாவதார கோலத்தில் ராமராயர் மண்டபத்தில் காட்சி தருகிறார். வரும் 18-ம் தேதி  திங்கள்கிழமை காலை மோகனாவதாரத்திலும், இரவு கள்ளழகர் திருக்கோலத்திர் புஷ்ப பல்லக்கு மைசூர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 19-ம் தேதி  செவ்வாய்கிழமை கள்ளழகர் அழகர்மலைக்கு சென்றடைகிறார்.

மதுரை மாநகரில் 2ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பங்கேற்புடன் சித்திரை திருவிழா நடக்க உள்ளது. எனவே தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பக்தர்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.  

மதுரை சித்திரை திரு விழாவில் குறிப்பிடத்தக்க அம்சம்- கள்ளழகர் எதிர் சேவை மற்றும் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியாகும். அப்போது பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி வேடம் அணிந்து, கள்ளழகருடன் நடந்தே மதுரைக்கு வருவார்கள். இதற்காக அவர்கள் அணிந்து இருக்கும் ஆடைகள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். 

மதுரை புதுமண்டபத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கான பிரத்தியேக உடைகள் தைக்கப்பட்டு வந்தன. அங்குள்ள கடைகள் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாறி விட்டதை அடுத்து அங்கு கள்ளழகர் பக்தர்களுக்கான பிரத்யேக உடைகள் தயாராகி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து