முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு : ஏப். 1 முதல் நடைமுறைக்கு வருகிறது

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      இந்தியா
Income Tax-2023-03-23

Source: provided

புதுடெல்லி : 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது.  ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

தற்போதைய நடைமுறையின் படி, புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதுவே, அவர்களது வருமானம் ரூ.7,00,100- ஆக இருந்தால், அதாவது ஆண்டு வருவாயில் வெறும் ரூ.100 கூடியிருந்தாலும், அவர்கள் ரூ.25,010 வரி செலுத்த வேண்டும். 

இந்நிலையில், வருமான வரி விலக்கு வரம்பான ரூ.7 லட்சத்துக்கு மேல் சற்று கூடுதலாக வருவாய் உடையவர்களுக்கு நிவாரண வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதன்படி ஆண்டு வருவாய் ரூ. 7,00,100 இருந்தால், கூடுதல் வருமானமான ரூ. 100 - ஐ மட்டும் வரி செலுத்தினால் போதும் என்று கூறப்படுகிறது. 

ரூ.7,27,700 வரையில் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் இந்த நிவாரண வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. 

மத்திய அரசு மக்களவையில் 64 திருத்தங்கள் கொண்ட புதிய நிதி மசோதாவை கடந்த வெள்ளியன்று நிறைவேற்றியது. அதில் இந்த மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரிமுறையின் கீழ் ரூ. 3 லட்சம் வரையில் வரி கிடையாது. ரூ. 3 லட்சம் - ரூ. 6 லட்சம் வரையில் 5 சதவீதம், ரூ.6 லட்சம் - ரூ.9 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.9 லட்சம் - ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.12 லட்சம் - ரூ.15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.15 லட்சம் மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

புதிய வரி முறையில் 6 வரம்புகள் இருந்த நிலையில் தற்போது அது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  பழைய வரி முறையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. பழைய வரி முறையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல், இதுவரையில் பழைய வரி முறை அடிப்படை யானதாக இருந்த நிலையில், இனி புதிய வரி முறை அடிப்படையானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து