முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்
Congress 2023 03 25

சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க. திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் - தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு முடிந்து மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர புதுச்சேரி தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திருச்சி மற்றும் தேனி தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் திருச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வென்றிருந்தார். அதேநேரம் தேனியில் போட்டியிட்ட இளங்கோவன் தோல்வி அடைந்தார். இதேபோல் ஆரணி தொகுதி கடந்த முறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த மூன்று தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. மாறாக, திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறையும், தேனிக்கு பதிலாக நெல்லை தொகுதியும், ஆரணிக்கு பதிலாக கடலூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகள் அப்படியே ஒதுக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் 4 தொகுதிகள், வட மாவட்டங்களில் 2 தொகுதிகள், டெல்டாவில் 2 தொகுதிகள், மேற்கு மாவட்டமான கிருஷ்ணகிரி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.

தொகுதி பங்கீட்டுக்கு பின் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, “இரண்டு அல்லது மூன்று தினங்களில் வேட்பாளர் அறிவிப்பு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

மதி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு: 

இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மதி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதி.மு.க. வெளியிட்ட அறிக்கையில், “நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், மறுமலர்ச்சி தி.மு.க.-வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தமுறை காங்கிரஸுக்கு திருச்சி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வென்றிருந்தார். அதேபோல் மதி.மு.க.வுக்கு கடந்த முறை ஈரோடு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இம்முறை மதி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து